photo

photo
Venkatesh.A.S

Saturday 21 September 2013

Forgive, Forget Forever ! (மன்னிப்போம், மறப்போம் எப்பொழுதும்)



மறத்தலும் மன்னித்தலும் !

பகுதி -1 




அடியார்
சற்குரு மகாதேவா, மூதேவியின் வழிபாடு சோம்பேறித் தனத்தை உண்டாக்கும் என்கிறார்களே. இதைப் பற்றிய விளக்கத்தை தங்கள் திருவாக்கால் அறிய விரும்புகிறோம்.
சற்குரு
உன்னுடைய கேள்வியிலேயே பதிலிருக்கிறதே. நீதான் அதைப் புரிந்து கொள்ளவில்லை. ”மூ” என்றால் உயர்ந்த, சிறந்த, உன்னத, உத்தம, மூல, முதன்மையான, மூத்த என்றெல்லாம் பொருளுண்டு. அப்படி இருக்கும்போது உயர்ந்த தேவியை வணங்கும் நீ தாழ்ந்து போவாயா, சற்றே சிந்தித்துப் பார்.

மூதேவி என்று அழைக்கப்படும் ஸ்ரீஜேஷ்டாதேவி திருமகளுக்கு மட்டும் மூத்தவள் என்று நினைக்க வேண்டாம். நவகிரகாதியருக்கே மூத்தவள் ஜேஷ்டாதேவி. மேலும் மூத்தவள் என்றால் எல்லோருக்கும் முன்னால் உற்பவித்தவள் என்று மட்டும் பொருளல்ல. அனைவரையும் விட ஞானத்தில், இறை பக்தியில் உயர்ந்தவள் என்றும் பொருள் உண்டு.
ஸ்ரீஜேஷ்டாதேவியிடம் தஞ்சம்
அடைந்த ஸ்ரீசனீஸ்வர மூர்த்தி
திருக் கைலாயம், வைகுண்டம் போன்ற தெய்வ லோகங்களைப் போல ஸ்ரீஜேஷ்டா தேவிக்கு என்றே ஒரு பிரத்யேகமான லோகமும் உண்டு.
மௌனகுரு தட்சிணா மூர்த்தி சனகாதி முனிவர்களுடன் காட்சி தருவதைப் போல ஸ்ரீஜேஷ்டாதேவியும் இரு கன்னிகைகளுடன் காட்சி தருவதை பல திருத்தலங்களில் நாம் பார்க்கலாம். ஸ்ரீஜேஷ்டாதேவி லோகத்தில் நிரந்தர வாசம் கொண்ட இத்தேவியர்களின் திருநாமங்கள் வில்வாம்ருதா, சுநந்யை என்பதாகும். ஸ்ரீஜேஷ்டாதேவியின் வலது புறத்தில் குதிரை முகத்துடன் அருள்புரியும் தேவியே வில்வாம்ருதா தேவி ஆவாள்.
ஒவ்வொரு தெய்வத்தின் அருள் புரியும் பாங்கு யுகம் என்னும் காலக் கோட்பாட்டைப் பொறுத்தும், மனிதர்கள் விலங்குகள் என்று ஜீவ சக்திக் கோட்பாட்டைப் பொறுத்தும் மாறுபடுவதைப் போல இத்தேவியர்களின் அருள்புரியும் பாங்கும் யுகத்திற்கு யுகம் ஜீவன்களைப் பொறுத்து மாறுபடும். கலியுக நியதியாக மனிதர்களுக்கு இவர்களின் அனுகிரக பாகுபாட்டை விளக்க வேண்டுமானால் வில்வாம்ருதா தேவி மனிதர்களுக்கு ஞாபக மறதியைத் தரக் கூடிய தேவியாக அருள்பாலிக்கிறாள்.
பொதுவாக, தேவதைகளும் தெய்வங்களும் மனிதர்களுக்குத் தேவையான நற்சக்திகளைத் தானே வரமாகத் தருவார்கள்? அப்படி இருக்கும்போது ஞாபக மறதியை ஒரு தெய்வம் அளித்தால் அது எப்படி ஒரு அனுகிரகமாக இருக்கும் என்று உங்களுக்குத் தோன்றலாம்? உண்மையில் இதை தீவிரமாக ஆத்ம விசாரம் செய்து பார்த்தால்தான் ஞாபக மறதியின் மகத்துவம் புரிய வரும்.
எந்த ஜீவ ராசியும் ஞாபக மறதி இல்லையென்றால் அது ஆன்மீகத்தில் முன்னேற்றம் கொள்ளவே முடியாது. இதுவே உண்மை. இதற்காகத்தான் ஒரு ஜீவன் ஒரு பிறவி முடிந்து அடுத்து பிறவி எடுக்கும்போது இறைவன் அந்த ஜீவனின் முந்தைய பிறவி நிகழ்வுகள் அனைத்தையும் முழுவதுமாக அழித்து விடுகிறான்.
இதை மேலும் விளக்கினால் இன்று நீங்கள் ஏதாவது ஒரு வருத்தமான செய்தியைக் கேள்விப்பட்டால் இரவு நீங்கள் நிம்மதியாகத் தூங்க முடியாது. நாட்கள் செல்லச் செல்ல அந்த துக்கமான செய்தியை எந்த அளவிற்கு மறக்கிறீர்களோ அந்த அளவிற்கு உங்களுக்குத் தூக்கம் அமைய வாய்ப்புண்டு. அது மட்டுமல்லாமல் ஒருவர் தேவைக்கு அதிகமாக செல்வத்தைத் தேடி வைக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அவர் இறந்தபின் தான் பாடுபட்டுத் தேடிய செல்வத்தின் நினைவு அவரிடம் இருந்தால் அவருடைய உயிர் தான் தேடிய செல்வத்தை விட்டுப் பிரியாமல் பேயாய் அவ்விடத்திலேயே சுற்றி வரும்.
இதைத்தான் பூதம் காத்த செல்வம் என்று பெரியோர்கள் சொல்வார்கள். அந்த செல்வம் யாருக்கும் பயன்படாது. அதை வேறு யாரும் பயன்படுத்தவும் முடியாது. மனித உடல் இல்லாததால் உயிர் பிரிந்தவர்கள் ஆவி ரூபத்தில் அதை பயன்படுத்த முடியாது. மற்றவர்கள் அந்தச் செல்வத்தைக் கண்டால் அதைப் பயன்படுத்தும் எண்ணமும் அவர்களுக்குத் தோன்றாது. எனவே பணம் சேர்த்தவர்களுக்கு ஞாபக மறதி என்ற ஒன்று ஏற்பட்டால்தான் அவர்கள் தாங்கள் தேடிய செல்வத்தைப் பற்றி மறந்து இப்பூமியிலிருந்து விடுதலை பெற்று அடுத்த பிறவிகளுக்குத் தங்களை ஆயத்தம் செய்து கொள்ள முடியும்.
அதே போல ஒருவர் உங்ளைத் திட்டியோ அடித்தோ துன்புறுத்தினால் மீண்டும் அவரைக் காணும் போதெல்லாம் அவரைப் பழி வாங்க வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்குத் தோன்றிக் கொண்டே இருக்கும் அல்லவா? இவ்வாறு ஒருவர் உங்களுக்கு இழைத்த துன்பம் முற்பிறவிகளில் நீங்கள் அவருக்கு இழைத்த துன்பத்தால் ஏற்பட்ட விளைவாக இருந்தால் நீங்கள் அவரைப் பழி வாங்க வேண்டும் என்று நினைப்பது தவறுதானே. இத்தகைய பழிவாங்கும் உணர்ச்சி உங்கள் உள்ளத்தில் நிரந்தரமாக தங்கி விடும்போது அதுவே கான்சர் அல்லது புற்று நோய் என்ற கொடிய நோயைத் தோற்றுவித்து விடுகிறது.
மனிதன் அனுபவிக்கும் எல்லா நோய்களுக்கும் காரணம் அவனுடைய முற்பிறவியின் செயல்களே என்று மகான்கள் வலியுறுத்துகிறார்கள். பழிக்குப் பழி என்ற உணர்வு சமுதாயத்தில் தற்போது மேலோங்கி நிற்பதன் காரணமாகவே எங்கு நோக்கினும் புற்று நோயின் தாக்குதல் அதிகமாக உள்ளது என்பதை நீங்கள் கண் கூடாகக் காணலாம்.
எனவே தயவு செய்து பழிவாங்கும் எண்ணத்தை வேரோடு களைய இறைவனை அடிக்கடி பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். அவ்வாறு ஒருவர் அளித்த துன்பத்தை மறக்கத் தேவையான சக்தியை அளிக்கும் தேவியே வில்வாம்ருத தேவி ஆவாள்.
இவ்வாறு மனித உடல் இருக்கும்போது அந்த உடலில் தூக்கம் போன்ற சுகத்தை அனுபவிக்கத் தேவையான ஞாபக மறதியை அளிக்கும் தேவியாக வில்வாம்ருத தேவியும் மனித உடலைத் துறந்து அடுத்த பிறவிக்குத் தயாராவதற்காக இப்பிறவி நிகழ்வுகளை மறக்கத் தேவையான ஞாபக மறதியை அளிக்கும் தேவியாக சுநந்யை தேவியும் அருள்பாலிக்கிறார்கள். ஸ்ரீஜேஷ்டாதேவியின் இடது புறம் அருள்பாலிக்கும் தேவியே சுநந்யை தேவி ஆவாள்.  
ஸ்ரீஜேஷ்டாதேவிக்கு அபிஷேக ஆராதனைகள் இயற்றி பிரசாதமாகப் பெற்ற அபிஷேக தீர்த்தத்தை தூங்கு மூஞ்சி மரத்திற்கு ஊற்றி மேற்கு நோக்கி சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி வந்தால் எதை எதை மறக்க வேண்டுமோ அதை மறக்க வைக்கும் சக்தியை வில்வாம்ருத தேவியும் சுநந்யை தேவியும் அருள்வார்கள்.
மேலும் பாதுகாப்பு, சமுதாய சூழ்நிலை போன்ற பல்வேறு காரணங்களால் மறுமணம் செய்து கொண்ட இளம் பெண்கள் தங்கள் முந்தைய மண வாழ்க்கை நிகழ்ச்சிகளால் தற்போதைய வாழ்வில் பல்வேறு குழப்பங்களைச் சந்தித்து மன அமைதி இழக்க நேரிடும். அத்தகையோருக்கு மன அமைதி அளிக்கும் தேவியே சுநந்யை தேவி ஆவாள். 
அதே சமயம் கணவனை இழந்தவர்கள் தாங்கள் மீண்டும் மறுமணம் செய்து கொள்ளாமல் தங்கள் கணவனையே நினைத்து மிஞ்சிய காலத்தை ஆன்மீகமாகப் பாதையில் அமைத்துக் கொள்வோம் என்ற மன உறுதியுடன் இருந்தால் அவர்களுக்குத் தேவையான மன உறுதியும் பாதுகாப்பான சூழ்நிலையும் அமைய சுநந்யை தேவி அருள்பாலிக்க வல்லவள்.
பல்வேறு உடல், மன உபாதைகளால் ஒவ்வொரு இரவும் தூக்க மாத்திரையை உட்கொண்டே தூங்குவது என்னும் நோயால் பலரும் வாடுகிறார்கள். அத்தகைய பழக்கத்திற்கு ஆளானோர் ஸ்ரீஜேஷ்டாதேவிக்கு மேற்கூறிய முறையில் வழிபாடுகள் இயற்றி வந்தால் நாளடைவில் இயற்கையான உறக்கமும் மன அமைதியும் கிட்டும். நரம்புத் தளர்ச்சி நோய்கள் குணமடையும்.
மூத்த திருமகள் முனிநிழல் வழிபாடுமூத்த திருமகள் என்றழைக்கப்படும் ஸ்ரீஜேஷ்டா தேவியை வணங்கி வழிபட பல்வேறு பூஜை முறைகள் உண்டு. இதில் கலியுகத்தில் தேவியை வழிபடும் சிறப்பு பூஜை முறையாக சித்தர்கள் வகுத்துத் தந்துள்ளதே மூத்த திருமகள் முனிநிழல் வழிபாடாகும்.
தியாக சீலரான, உத்தம புருஷரான உத்தாதலக மகரிஷியின் அனுகிரக சக்திகளையே நாம் முனிநிழல் என்றழைக்கிறோம். இந்த பிரபஞ்சத்தில் மிகச் சிறந்த ஒன்றைக் கூற வேண்டுமானால் அதுவே குரு பிரசாதம் ஆகும். சற்குருவின் கருணை கடாட்சத்தைத் தவிர உயர்ந்த பொருள் இங்கு வேறொன்றுமில்லை. இதையே குரு பார்க்க கோடி நன்மை என்று பெரியோர்கள் கூறுவார்கள்.
உத்தம பத்தினி என்றால் கணவனை நிழல் போல் தொடர்பவள் என்ற ஓர் அர்த்தம் உண்டு. அதாவது உருவமும் நிழலும் ஒன்றை விட்டு ஒன்றுப் பிரியாத நிலையில் இருப்பதால் இந்நிலையில் வாழும் தம்பதிகள் தெய்வ கடாட்சம் பூரணமாய் நிரம்பப் பெற்றவர்கள் ஆகிறார்கள். அப்படி சிறப்பான வாழ்க்கை வாழும் கணவனின் திருமார்பில் மனைவியும் மனைவியின் உள்ளத்தில் கணவனும் வாழ்கிறார்கள் என்பது இல்லற தத்துவம்.
அதனால்தான் பெருமாளை வழிபடுவதால் திருமாலின் திருமார்பில் உறையும் லட்சுமி தேவியையும் வழிபட்ட பலன் பெருகி இல்லத்தில் லட்சுமி கடாட்ச சக்திகள் நிரவும். அதே போல திருமாலின் அவதாரமான மச்சாவதாரத்தை நினைவு கூரும் வகையில் அமையும் வண்ண மீன்கள் வளர்ப்பும் இல்லத்தில் செல்வத்தையும் அமைதியையும் பெருக்கும்.
ஸ்ரீசதாதப சித்தர் அருளிய இந்த முனிநிழல் வழிபாட்டை திருக்கோயில்களில் நிகழ்த்துவதே சிறப்பாகும். திருச்சி, செம்பொனார் கோயில், காஞ்சீபுரம் போன்ற குறித்த சில திருத்தலங்களில் மட்டுமே ஸ்ரீஜேஷ்டாதேவியின் திருஉருவம் உள்ளது. மற்ற திருத்தலங்களில் தேவியை வழிபட விரும்புவோர் ஸ்ரீஜேஷ்டாதேவிக்கு உரிய வடமேற்கு (வாயு மூலை) திசையில் தங்கள் வழிபாடுகளை மேற்கொள்ளலாம்.
இல்லத்தில் ஸ்ரீஜேஷ்டாதேவியை வழிபட விரும்பினால் அவர்கள் குறைந்தது ஒரு வருடமாவது (300 நாட்களுக்குக் குறையாமல்) காலையில் எழுந்தவுடன் கரதரிசனம் செய்து உத்தாதலக மகரிஷியை வழிபட்டிருக்க வேண்டும். ஸ்ரீசதாதப சித்தர் அருளிய ஸ்ரீஜேஷ்டாதேவி துதியை குறைந்தது 300 தடவை ஓதி வழிபட்டவர்களும் இல்லத்திலேயே ஸ்ரீஜேஷ்டாதேவியை வழிபடும் தகுதியைப் பெறுகிறார்கள்.
சுத்தமான நல்லெண்ணையால் 36 அகல் விளக்கு தீபங்களை ஏற்ற வேண்டும். இந்த 36 தீபங்களும் திசைக்கு ஒன்பது தீபங்களாக இருக்குமாறு அமைத்துக் கொள்ள வேண்டும். அதாவது கிழக்கு திசையை நோக்கி மூன்று வரிசையில் மூன்று தீபங்களையும். அதே போல தெற்கு, மேற்கு, வடக்கு திசைகளையும் நோக்கி தீபங்களை ஏற்றி அந்த 36 தீபங்களின் நடுவில் பச்சரிசி மாவால் ஹிருதய கமல கோலத்தையோ அல்லது ஸ்வஸ்திக் சக்கரத்தையோ வரைந்து கொள்ள வேண்டும்.
திருக்கோயில்களில் ஸ்ரீஜேஷ்டாதேவிக்கு அபிஷேக ஆராதனைகளை நிறைவேற்றிய பின் ஆப்பிள், செந்தாமரை, பவளமல்லி, நீலோத்பலம் போன்ற மலர், கனி அலங்காரத்தை நிறைவேற்றுவது சிறப்பாகும். மேற்கூறிய முறையில் 36 தீபங்களையும் ஏற்றி வைத்து ஸ்ரீஜேஷ்டாதேவி துதியையும் வில்வாஷ்டகம், கோளறு பதிகம் போன்ற துதிகளையும் ஓதி வழிபடுவதால் சித்தர்கள் அருளும் முனிநிழல் என்ற அபூர்வமான அனுகிரக சக்திகளைப் பெறலாம்.
2012ம் வருடத்திற்கு உரிய சிறப்பான வழிபாடாக மலர்வதே மேற்கூறிய மலர், கனியுடன் திகழும் ஸ்ரீஜேஷ்டாதேவி வழிபாடாகும். காலம் செல்லச் செல்ல அமைதியின்மையும் மனக் குழப்பமும் மக்கள் சமுதாயத்தில் மிகும் என்று சித்த கிரந்தங்கள் உரைக்கின்றன. கடவுள் நம்பிக்கை உடையவர்கள் கூட சமுதாயத்தில் தோன்றும் பல்வேறு சீர்கேடான நிகழ்ச்சிகளால் கடவுள், குரு நம்பிக்கையில் தளர்ச்சி ஏற்பட வாய்ப்புண்டு. எனவே உறுதியான, திடமான மனத்தை பெற்று வாழ உதவுவதே ஸ்ரீஜேஷ்டா தேவி வழிபாடாகும்.
வரும் 2020ம் ஆண்டு தொடர்ந்து ஒரு வார காலத்திற்கு சூரியனைக் காண முடியாத சூழ்நிலை உருவாகும் என்று சித்த கிரந்தங்கள் உரைக்கின்றன. எதிர்பாராத வகையில் ஓரிரு நிமிடங்கள் மின் விளக்குகள் நின்று விட்டாலே மக்கள் மனதில் அச்சம், குழப்பம், பீதி போன்றவை உருவாகி விடுகின்றன என்பதை நாம் அறிவோம். அவ்வாறு இருக்கும்போது சூரியனே மறைந்து போகிறார் என்றால் அத்தகைய சூழ்நிலையில் எத்தகைய ஒரு கடுமையான மனக் குழப்பம் ஏற்படும் என்பதை சற்றே சிந்தித்துப் பாருங்கள்.
எனவே அத்தகைய ஒரு கடுமையான மனக் குழப்பம், பீதியையும் அகற்றக் கூடிய அனுகிரக சக்தியை அளிக்கக் கூடியதே மூத்த திருமகள் வழிபாடாகும். தெய்வ நம்பிக்கையையும், குரு நம்பிக்கையையும் மேலும் மேலும் பெருக்கிக் கொள்ள விழைவோர் தொடர்ந்து ஸ்ரீஜேஷ்டா தேவியை மேற்கூறிய முறையில் துதித்து வருவதால் தங்கள் சாதனையில் சிறப்பான முன்னேற்றத்தைக் காணலாம்.
பொதுவாக தெய்வத்தை இந்நாளில் இந்த இடத்தில்தான் வழிபடலாம் என்ற வரைமுறை கிடையாது. எந்த இடத்திலும் எந்த நேரத்திலும் எந்த சூழ்நிலையிலும் இறைவனை வழிபடலாம். இதில் எந்த விதமான சந்ததேகமும் வேண்டாம். ஆனால், சில குறிப்பிட்ட பூஜைகளில் சிறப்பான பலனை பெறுவதற்காக குறித்த கால தேச வரைமுறைகள் சித்தர்கள், மகான்களால் ஏற்படுத்தப்பட்டு உள்ளது என்பதும் உண்மையே.
இம்முறையில் ஸ்ரீஜேஷ்டா தேவியை ரோஹிணி, மகம், அனுஷம், திருவோணம் என்னும் நட்சத்திரங்களில் வழிபடுவதால் உறுதியான மன உறுதியும் எடுத்த காரியத்தை வெற்றியுடன் சாதிக்கும் திறமையும் சிறப்பான முனிநிழல் அனுகிரகமாக கிட்டும். ஒரு வருடத்தில் வரும் மேற்கூறிய நான்கு நட்சத்திர தினங்களிலும் தொடர்ந்து வழிபாடுகளை நிகழ்த்தி வந்தால் எத்தகைய சூழ்நிலையிலும் அஞ்சாமல் செயல்படும் மன உறுதியைப் பெறலாம்.
நவமி, திரயோதசி, பௌர்ணமி திதிகளும் ஸ்ரீஜேஷ்டாதேவிக்கு உரிய சிறப்பான பூஜை தினங்களாகும். இந்த திதிகள் மேற்கூறிய நட்சத்திரங்களுடன் இணைந்து வந்தால் பலன்கள் பன்மடங்காக விருத்தியாகும்.



நன்றி : www.kulaluravuthiagi.com/vina1

No comments:

Post a Comment