photo

photo
Venkatesh.A.S

Saturday 28 September 2013

Mosquitoes- New Dimension ! (அறிந்த கொசுவும் அறிந்திராத செயலும்)


"நான் கொசு"

 


"நான் ஈ" பார்த்திருப்பீர்கள். அதில் கதாநாயகன் நாயகியை காக்க விதியின் வசத்தால் "ஈ " யாகப் பிறந்து வில்லனை அழிப்பது (சற்று நகைச்சுவையுடன்) தான் கதை. கற்பனையானாலும் அதில் நியாயம் உள்ளது. நல்ல கருத்து உள்ளது. நல்ல கற்பனைவளம் உள்ளது. அந்த திரைப்படத்திற்கு உழைத்தவர்களுக்கு நன்றிகளும் பாராட்டுகளும்.

இப்பொழுது "கொசுவை" பாப்போம். பெரும்பாலோனோர் (நான் உட்பட) அறிந்திராத புதிய கோணத்தில் இங்கு கொசுப்பற்றி சொல்லப்பட்டுள்ளது. எத்தனை பேர் இதை நம்புவாரோ / ஒத்து கொள்வாரோ தெரியாது.

எது எப்படியோ, எது நல்லதோ அதை ஒத்து கொள்வது நல்லது தானே?
"நான் ஈ" யை ஏற்றுக்கொண்டவர்கள் "நான் கொசு" வையும் ஏற்று கொள்ளலாமே !

அடியார்

நேற்று இரவு முழுவதும் தூங்கவே முடியவில்லை. கொசு மிகவும் தொந்தரவு கொடுத்து விட்டது. இவ்வளவு தொல்லை தரும் கொசுக்களை இறைவன் ஏன் படைத்தார், சற்குருதேவா?
சற்குரு
இறைவனின் படைப்பு அற்புதமானது. மிகவும் ஆழ்ந்த அர்த்தம் உடையது. உன்னுடைய கைரேகையைப் பார்த்தாயா? உன்னுடைய கைரேகையைப் போல அதே ரேகை உடைய இன்னொரு மனிதர் இந்த உலகத்தில் இதுவரை பிறந்தது கிடையாது. இனி பிறக்கப் போவதும் இல்லை. உன்னைப் போல உருவம், அங்கங்கள் உடையவகள் எவ்வளவோ பேரை நீ பார்த்திருக்கலாம். ஆனால், உன்னுடைய கைரேகை உலகில் வேறு எவருக்கும் அமையாது.
இதிலிருந்து என்ன தெரிகிறது? உலகில் ஒரே ஒரு கடவுள்தான் உண்டு. தனக்குவமை இல்லாதவனே கடவுள். அதை தன்னுடைய படைப்பு மூலமாக, உன்னுடைய பிறப்பின் மூலம் உனக்கு உணர்த்துகிறான் இறைவன். மக்கள்தான் இந்த சாதாரண உண்மையைப் புரிந்து கொள்வதில்லை. இத்தகைய அபூர்வமான உன்னை இறைவன் எதற்காகப் படைத்தான் என்பதை நீ உணர்ந்து கொண்டாயா?

(அடியார் ”இல்லை” என்று தலையாட்டுவதைப் பார்த்து புன்னகை பூத்தவாறே சற்குரு தொடர்கிறார்…)

நீ ஏன் பிறந்தாய் என்பதே உனக்குத் தெரியாத போது கொசுவை ஏன் இறைவன் படைத்தான் என்று கேட்டால் அதற்கு என்ன பதில் சொல்வது? நீ இந்த உலகத்தில் ஆற்ற வேண்டிய காரியங்கள் ஏராளம், ஏராளம். அதற்காகத்தான் இறைவன் பெறுதற்கரிய இந்த மானுட பிறவியை அளித்திருக்கிறான். உங்களைப் போன்ற அடியார்களின் பிறவி இரகசியங்களை தெரிவித்து உங்களின் ஆன்மீகப் பணிகளை உணரச் செய்யவே இறைவன் பெரும் கருணை கொண்டு சற்குருமார்களை பூமிக்கு அனுப்பி வைக்கிறார்.
மக்கள் தங்களை யார் என்று உணர்ந்து ஆன்மீகச் சாதனைகளை தொடர்வதற்கு நல்வழி காட்டுகிறான். இதைத்தான் ரமண மகரிஷி போன்ற மகான்கள் ”நான் யார்?” என்று ஆத்ம விசாரம் செய்து மனத் தெளிவு பெறுமாறு அறிவுறுத்தி வந்தார்கள். கொசுவின் படைப்பு இரகசியத்தைப் பற்றித் தெரிந்து கொள்வதும் ஒரு விதத்தில் உங்களுடைய ஆன்மீகச் சிந்தனையை வளப்படுத்தும்.
பொதுவாக, ஒரு கொசுவின் பூமி வாழ்வு 21 நாட்கள் என்பது சித்தர்களின் கணக்கு. இந்த 21 நாட்களில் அந்தக் கொசு பத்தாயிரம் ஜீவன்களைக் கடித்து விடும். எனவே, உங்களை ஒரு கொசு கடிக்கும்போது நீங்கள் அதை அடித்து அந்தக் கொசு இறந்து விட்டால் அந்த கொசு தன்னுடைய கணக்கை முடித்து விட்டது என்று அர்த்தம். பத்தாயிரம் பேரை தன்னுடைய குறுகிய காலத்தில் கடித்து விட வேண்டும் என்ற கடமையை எந்தக் கொசுவும் மறப்பதில்லை, தன்னுடைய கடமையை நிறைவேற்றாமல் எந்தக் கொசுவும் இறப்பதும் இல்லை.
இதில் ஒரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் மனிதன், மிருகம், தாவரம் போன்ற எந்த ஜீவன் நம்முடைய முன்னிலையில் உயிரை விட்டாலும், ஓம் த்ரயம்பகம் யஜாமஹே சுகந்திம் புஷ்டிவர்த்தனம் உர்வாருகமிக பந்தனான் ம்ருத்யோர் முக்ஷீய மாம்ருதாத் என்ற ம்ருத்யுஞ்ஜய மந்திரத்தை ஓதி அந்த ஜீவன் நற்கதியை அடைய இறைவனை பிரார்த்திக்க வேண்டும் என்ற கடமை மனிதனுக்கு உண்டு.

சத்ய சாய்பாபாவும், ”உங்களை ஏதாவது பாம்பு, தேள் போன்ற விஷ பூச்சிகள் கடிக்க வந்தால் சாய்ராம் என்று கூறி அதை அடிக்கலாம், தவறில்லை. அதனால் உங்களை எந்தத் தோஷமும் அண்டாது. அந்த பூச்சிகளும் நற்கதி அடையும்,” என்று கூறியுள்ளார்.

ஆனால், கொசுவை அடிக்கும்போது எந்த மந்திரத்தையும் ஓத வேண்டிய தேவை அங்கு ஏற்படுவதில்லை. காரணம், உங்கள் மந்திரத்தால் அந்தக் கொசுவிற்கு கிடைக்கும் அனுகிரகத்தை விட கொசுவால் உங்களுக்குக் கிடைக்கும் அனுகிரகமே அதிக வலிமை உடையது. முடிந்தால் மௌனமாக கொசுவின் ”கடியை” பொறுத்துக் கொள்ளுங்கள்.

கொசுக் கடியால் சமுதாயத்தில் வியாதிகள் பரவுகிறது என்ற கருத்து மக்கள் சமுதாயத்தில் தொன்று தொட்டு நிலவி வருகிறது. பலமுறை ஏற்கனவே உங்களிடம் கூறியபடி மனிதனுக்கு வரும் நோய்நொடிகள் அனைத்துமே அவனுடைய பூர்வ ஜன்ம கர்ம விளைவுகளே. ”இன்னா முற்பகல் செய்யின், இன்னா பிற்பகல் விளையும்,” என்பதே உண்மை.

மனிதக் கணக்கில் எடுத்துக் கொண்டாலும் ஒரு கொசு பத்தாயிரம் பேரைக் கடிக்கும் என்றால் உலகில் உள்ள எல்லாக் கொசுக்களும் கடித்து வியாதி ஏற்பட்டால் ஒரே நாளில் உலகம் அழிந்து விடும் அல்லவா? கொசுவைப் போலவே ஈக்களால் வியாதி பரவுகின்றது என்ற தவறான கருத்தும் மக்களிடையே நிரவி வருகிறது. ஈ ஒரு தவறான செயலைச் செய்து மக்களுக்குத் தீமை விளைவிக்கும் என்பது உண்மையானால் தென்பூமியைத் தாங்கும் வல்லமை பெற்ற அகத்திய மகரிஷி ஈ வடிவம் எடுத்து ஈசனை வழிபட்டிருப்பாரா? அகத்திய பெருமான் ஈ வடிவில் வழிபட்ட தலமே திருச்சி அருகே உள்ள திருஈங்கோய் மலை திருத்தலமாகும்.

உணவுப் பொருட்கள் அழுகிப் போய் விட்டாலோ, மிருகங்கள் போன்றவை இறந்து விட்டாலோ அவ்விடத்தில் நோய் பரப்பும் நுண் கிருமிகள் உண்டாகி விடுகின்றன. எனவே, அத்தகைய சூழ்நிலையை நிவர்த்திப்பதற்காக இறைவன் அங்கு ஈக்களை அனுப்பி அழுகிய பொருட்களை உண்டு சுற்றுப் புறத்தைப் பாதுகாப்பதற்காக ஈக்கள் அந்த கழிவுப் பொருட்கள் உண்ணும்படி ஒரு தெய்வீக ஏற்பாட்டை வகுத்துள்ளான். எனவே ஈக்களால் சுற்றுப்புற சுகாதாரம் பாதிக்கப்படும் என்பதை விட சுகாதார நிலை பழுதடைந்த இடத்தில் ஈக்கள் தோன்றும் என்பதே சரியான அணுகுமுறை. இதுவே தெய்வீகம் சொல்லித் தரும் பாடம்.

இவ்வாறு சமுதாயத்தில் ஏற்படும் சீர்கேட்டை ஈர்த்து உலகத்தை தூய்மைப்படுத்தும் அற்புத இறைப் பணியை ஆற்றவே அகத்திய பெருமான் ஈ வடிவில் ஈங்கோய் ஈசனை வேண்டினார்.

அசுர சக்திகளின் ஒட்டு மொத்த உருவமாக விளங்கிய சூரபத்மனை வதம் செய்வதற்காக எம்பெருமான் தன்னுடைய நெற்றிக் கண்ணிலிருந்து ஆறு தலையுடன் விளங்கிய சுப்ரமண்ய சுவாமியைத் தோற்றுவித்தார் அல்லவா? அது போல எங்கெல்லாம் அசுர சக்திகள் தோன்றுகின்றனவோ அதைக் களைய ஆறு கால்களுடன் விளங்கும் கொசுக்களும், ஈக்களும், பிரபஞ்சத்தைத் தூய்மைப்படுத்தும் தேனீ, வண்ணத்துப் பூச்சி போன்ற ஆறு கால் பூச்சிகளும் தோன்றுவதால் இவற்றை சரவணபவ ஜீவிகள் என்ற முருக நாமத்தால் அழைக்கின்றனர்.

சரவணபவ ஜீவிகளைப் போல சரவணபவ எண்களும் உண்டு. ஏற்கனவே உங்களுக்கு குசா என்னும் அற்புதமான நற்சக்தியைப் பற்றி விளக்கியுள்ளேன். நான்காய் விரிந்து இரண்டில் அடங்குவது குசா தத்துவம். இம்முறையில் ஒரு எண்ணை நான்கால் பெருக்கி இரண்டால் வகுத்தால் கிடைப்பதே அந்த எண்ணுக்குரிய குசா எண்ணாகும். இந்த குசா எண் நன்மையை மட்டுமே தரும் இயல்புடையது.

இவ்வாறு அனைத்து எண்களுக்குரிய குசா எண்களைக் கணக்கிட்டால், ஒன்றின் குசா எண் 2, இரண்டின் குசா எண் 4, நான்கின் குசா எண் 8, எட்டின் குசா எண் 7, ஏழின் குசா எண் 5, ஐந்தின் குசா எண் 1 என குசா வளையமாக வரும் அல்லவா? இந்த ஆறு எண்களும், அதாவது 1, 2, 4, 5, 7, 8 என்ற ஆறு எண்களும் சரவணபவ எண்கள் என்று அழைக்கப்படும்.
எப்படி சரவணபவ என்ற ஆறு எழுத்துக்கு உரிய முருகப் பெருமான் அசுர சக்தியை அழிப்பதற்காக எம்பெருமானால் தோற்றுவிக்கப்பட்டாரோ அது போல இந்த ஆறு எண்களும் உலகில் உள்ள தீய சக்திகளை, அசுர எண்ணங்களை மாய்ப்பதற்காக இறைவனால் படைக்கப்பட்டவையாகும். ஆனால், இந்த எண் சக்திகளை முறையாகப் பயன்படுத்தும் விதத்தை, வித்தையை சித்தர்கள் மட்டுமே அறிவர்.

தற்காலத்தில் பலரும் வீடுகளைக் கட்டும்போது அருகில் இருந்து காவல் காப்பது கிடையாது. கட்டிட வேலைகள் முழுவதுமாக முடிந்து கிரகப்பிரவேசம் நிறைவேற்றும் சமயத்தில்தான் பெரும்பாலோனார் தங்கள் வீட்டில் பிரவேசிக்கிறார்கள். இன்னும் பல இடங்களில் FLAT போன்று தயார் நிலையில் (READYMADE HOUSES) உள்ள வீட்டை வாங்க வேண்டிய நிலையில் மக்கள் இருக்கிறார்கள். இவ்வாறு கட்டிட வேலைகள் நடைபெறும்போது அக்கட்டிடத்தில் கட்டிட வேலையில் ஈடுபட்டுள்ளவர்கள், அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள், வழிப்போக்கர்கள் அங்கு மலஜலம் கழித்தல், சிறுநீர் கழித்தல், சூதாடுதல், மது பானங்கள் அருந்துதல் போன்ற பலவித தவறான செயல்களைப் புரிய வாய்ப்புண்டு அல்லவா? இத்தகைய கடுமையான தோஷங்கள் அந்த வீடுகளில் வசிப்போரை எதிர்காலத்தில் மிகவும் பாதிக்கும்

ஆனால், இத்தகைய தோஷங்கள் தற்காலத்தில் தவிர்க்க முடியாது என்பதால் சித்தர்கள் பெருங் கருணை கொண்டு அவற்றைக் களைய இந்த சரவணபவ எண் சக்தி வழிபாட்டு முறையை அருளி கடுமையான கர்ம வினைகளையும் நீக்கும் உபாயத்தை அருளியுள்ளனர். இங்கு அளிக்கப்பட்டுள்ள சரவணபவ எண் சக்கரத்தை ஒரு மாம்பலகை, அல்லது தேக்கு பலகையிலோ அல்லது வாழை இலையிலோ பச்சரிசி மாவால் வரைந்து கொண்டு பாம்பன் சுவாமிகள் அருளிய பகை கடிதல் துதியை ஓதி தேனும் தினை மாவும் கலந்து முருகப் பெருமானுக்கு படைத்து தானமாக அளித்தல் நலம்.

இவ்வழிபாட்டை செவ்வாய்க் கிழமைகளிலும், சஷ்டி திதிகளிலும், மேற்கூறிய சரவணபவ எண் நிரவும் தேதிகளிலும் அதாவது 1, 2, 4, 5, 7, 8 தேதிகளிலும் நிறைவேற்றுதல் நலம். வழிபாட்டு தினங்களில் தரமான முகம் பார்க்கும் கண்ணாடி, அழகான சீப்பு, சுத்தமான தேங்காய் எண்ணை இவற்றை பெண்களுக்கும் பள்ளிச் சிறுமிகளுக்கும் அளித்து வந்தால் கடுமையான வாஸ்து தோஷங்களிலிருந்து நிவாரணம் பெற வழி முறைகள் கிட்டும்.

இனி கொசுவைப் பற்றி தொடர்வோம். எல்லா ஜீவன்களைப் போல கொசுக்களும் பலவிதமான பிரிவைச் சார்ந்திருக்கின்றன. அதில் சில வகை கொசுக்களின் செயல்பாட்டைப் பற்றி உங்களுக்குத் தெரிவிக்கிறேன். மனித உடலில் 72000 நாடி நரம்புகள் உள்ளன. இவை கண்ணுக்குத் தெரியாதவை. இரத்தத்தை எடுத்துச் செல்லக் கூடிய இரத்தக் குழாய்கள் மனித உடலின் மேற்புறத்திலும் உள்புறத்திலும் ஏராளமாக உள்ளன. இவற்றை தகுந்த உபகரணங்கள் மூலமாக எளிதாகக் காண முடியும். இதயத்திற்குச் செல்லும் இரத்தம் அசுத்தமானது, இதயத்திலிருந்து வெளியாகும் இரத்தம் தூய்மையானது. இது நீங்கள் அறிந்த ஒன்றுதான்.

காற்று, நீர் மூலமாக மனித உடலில் கிருமிகள் மட்டும் அல்லாது பல்வேறு தீய எண்ணங்களும் குடியேறுகின்றன. இந்தத் தீய எண்ண சக்திகள் இரத்தத்தில் கரைந்து உடலில் பல்வேறு பாகங்களில் நிலை கொள்கின்றன. இந்த அசுத்தமான இரத்தத்தில் உள்ள நச்சு எண்ணக் கழிவுகளை கொசுக்கள் உறிஞ்சி தாங்கள் ஏற்றுக் கொள்கின்றன. எனவேதான் பெரும்பாலான கொசுக்கள் உடலின் மேல் பாகத்தில் அமைந்துள்ள இரத்த நாளங்களில் அல்லது சிரைகளில் அமர்ந்து இரத்தத்தை உறிஞ்சுவதை வழக்கமாகக் கொண்டுள்ளன.

அது மட்டுமல்லாமல் நீங்கள் கொசுக்களின் செய்கைகளை உற்றுக் கவனித்தால் ஓர் உண்மை விளங்கும். உங்கள் உடல் மீது அமரும் அனைத்துக் கொசுக்களும் உங்களைக் கடிப்பதில்லை. சில கொசுக்கள் சற்று நேரம் அமர்ந்து விட்டுப் பின்னர் பறந்து சென்று விடும். உங்கள் மீது அமரும் கொசுக்கள் ஏனோ தானோ என்று அமர்வதில்லை. அவைகள் குறிப்பிட்ட நாடிகளின் மீதே அமர்கின்றன. நீங்கள் கொசுவை விரட்டி விட்டால் அது எந்த நாடியின் மீது முன்னர் அமர்ந்திருந்ததோ அதே இடத்திலேயே மீண்டும் வந்து அமர்ந்து கொள்ளும்.

இதிலிருந்து என்ன தெரிகிறது? ஒவ்வொரு கொசுவும் எந்த மனிதனை எந்த இடத்தில் எந்த சிரையில் கடித்து எந்த அளவு இரத்தத்தை உறிஞ்ச வேண்டும் அதன் மூலம் எத்தகைய தீய எண்ண சக்திகளை அவன் உடம்பிலிருந்து ஈர்த்துக் கொள்ள வேண்டும் என்ற தெளிவான கடமையால் உந்தப்பட்டுதான் மனிதனை அடைகிறது என்பதை இதன் மூலம் நீங்கள் ஆத்ம விசாரம் செய்து உணர்ந்து கொள்ளலாம். மனிதனின் உடலில் கரைந்துள்ள சாதாரண விஷ சக்திகளை கொசுக்கள் தங்கள் உணர்வுக் குழாய் மூலம் உறிஞ்சிக் கொள்ளும். அத்தகைய தருணங்களில் அவை மனிதனை கடிப்பதில்லை. தொடு உணர்ச்சியின் மூலமே அவை விஷசக்திகளை கிரகிக்கும் அற்புத ஆற்றலைப் பெற்றிருப்பதே இதற்குக் காரணம்.

சில வகையான மூலிகை கொசுக்கள் உண்டு. இவை குறிப்பிட்ட மூலிகைகளில் உள்ள சாற்றை குறித்த ஹோரை நேரத்தில் உறிஞ்சிக் கொண்டு வந்து மனிதர்களின் இரத்த நாளங்களில் குறித்த அமிர்த ஹோரை நேரத்தில் பாய்ச்சி அற்புத சேவை புரிகின்றன. அஸ்வினி லோகத்தில் இத்தகைய கொசுக்களின் நடமாட்டம் அதிகம். இந்த கொசுக்களுடன் தொடர்பு கொண்டு நமக்கு உள்ள நோய்களைத் தீர்ப்பதற்காக பித்ருக்கள் என்னும் நமது உத்தம முன்னோர்கள் அல்லும் பகலும் அரும்பாடு படுகின்றனர். இவ்வாறு கொசுக்கள் மூலிகைச் சாற்றை மனித உடலில் செலுத்தும்போது நாம் எந்த அளவிற்கு பித்ருக்களுக்கு தர்ப்பணாதிகள் அளித்து தீர்த்த சக்தியை பித்ரு லோகத்தில் நிரவி உள்ளோமோ அந்த அளவிற்கு நமது உடலில் உள்ள அமிர்த சக்திகள் மேம்பட்டு நோய் நிவாரண சக்திகள் பெருகும்.

மூல நட்சத்திர நேரம் நிரவியுள்ள நேரத்தில் இத்தகைய கொசுக்கள் திருஅண்ணாமலை, சதுரகிரி, தேனிமலை, திருமலை போன்ற மூலிகை சக்திகள், ரசமணி சக்திகள் பரிணமிக்கும் திருத்தலங்களில் கிரிவலம் வந்து தங்கள் மருத்துவ அமிர்த சக்திகளை பெருக்கிக் கொள்கின்றன என்பது நீங்கள் அறியாத ஆன்மீக விந்தையாகும். பொதுவாக எந்த மூலிகையாக இருந்தாலும் அதை பிராண பிரதிஷ்டை செய்தே மருத்துவத்திற்குப் பயன்படுத்த வேண்டும் என்ற நியதி உண்டு. அப்போதுதான் வைத்தியர்கள் மூலிகை தேவதைகளின் சாபத்திற்கு ஆளாகாமல் இருப்பதுடன் அவர்கள் அளிக்கும் மூலிகை மருந்துகளும் அற்புத நோய் நிவாரண சக்திகளுடன் துலங்கும்.

ஆனால், அஸ்வினி லோகத்திலிருந்து வரும் வைத்திய கொசுக்களுக்கு இந்த விதியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டு இருப்பதால் கொசுக்கள் மூலம் பெறும் மூலிகைச் சாறு பூரணமான நோய் நிவாரண சக்திகளுடன் விளங்கும். தற்காலத்தில் சமயபுரம், திருஅண்ணாமலை, பழநி போன்ற திருத்தலங்களில் பக்தர்கள் இரவு முழுவதும் தங்கி இறைவனை வழிபடும்போது தீர்க்க முடியாத பல நோய்களிலிருந்து நிவாரணம் பெறுவதற்கு இத்தகைய மூலிகை கொசுக்களின் சேவையும் பல ஆன்மீக காரணங்களில் ஒன்றாகும்.
மனிதர்கள் நெருங்க முடியாத பல அடர்ந்த வனங்கள் பூமியெங்கும் உண்டு. இத்தகைய அடர்ந்த காடுகளில் பல அற்புதமான சிரஞ்சீவி மூலிகைகள் இன்றும் தோன்றிக் கொண்டுதான் இருக்கின்றன. இத்தகைய அடர்ந்த காடுகளில் உள்ள சிரஞ்சீவி மூலிகைகளின் சாற்றை உறிஞ்சி அவற்றை திருக்கோயில் தீர்த்தங்களில் சேர்க்கும் பணியையும் கொசுக்களே மேற்கொள்கின்றன. அசுத்த நீர் தங்கும் கழிவு நீர் தேக்கங்களிலும் சாக்கடைகளிலும் கொசுக்கள் உற்பத்தியாகின்றன என்று நாம் எண்ணினால் மிகவும் தூய்மையான காற்று வீசும் காடுகளில் கொசுக்களின் நடமாட்டம் மிகுதியாக உள்ளதே. இதன் காரணத்தை ஆத்ம விசாரம் செய்து பார்த்தால்தான் கொசுக்களின் அற்புத ஆன்மீக சேவை புரிய வரும்.

காருண்ய கொசுக்கள் என்ற நாமம் கொண்ட அற்புதமான ஒரு கொசு வகை உண்டு. இவை நிறைவேற்றும் பணியோ மிகவும் சிறப்பு வாய்ந்தது. நம்முடைய உடலில் நல்ல இரத்தமும் அசுத்த இரத்தமும் கலந்து உடலெங்கும் வியாபித்து உள்ளது அல்லவா? ஆனால், மகான்கள், யோகிகளின் உடம்பில் நல்ல இரத்தம், அசுத்த இரத்தம் என்ற பாகுபாடு கிடையாது.

மகான்களின் உடல் உண்மையில் மாயையான ஒரு தோற்றமே. அதனால்தான் மகான்கள் பலரும் தங்கள் பக்தர்கள் விரும்பும் உருவத்தில் எல்லாம் காட்சி தருகிறார்கள். முருகனாக ஒருவருக்கும், கிருஷ்ணனாக ஒருவருக்கும், ராமராக ஒருவருக்கும் ஒரே சற்குரு பல சீடர்களுக்கும் காட்சி அளிப்பதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். இவ்வாறு பஞ்ச பூத தத்துவங்களின் திரட்சியாக விளங்கும் மகான்கள் தங்கள் உடலில் ஜீவ சக்தியை இரத்தமாகவும் சேமித்து வைத்திருப்பது உண்டு.
மகான்களின் சக்தி அனைத்தையும் மற்றவர்களுக்காகவே வைத்திருப்பதால் தங்களின் இரத்தம் என்ற ஆன்ம சக்தியையும் மற்ற ஜீவன்களுக்காக அர்ப்பணிக்கின்றனர். அத்தகைய மகான்கள் தங்கள் தெய்வீகத் திருப்பணியை கொசுக்கள் மூலமாகவே நிறைவேற்றுகின்றனர். ஆம். கேட்பதற்கு விந்தையாக, விசித்திரமாகத் தோன்றினாலும், இதுவே உண்மை. மகான்கள் திருமேனியை யாராலும் அவர்கள் விரும்பினால் அன்றி பார்க்க முடியாது. அவ்வாறிருக்க அவர்கள் உடம்பில் உள்ள இரத்தத்தை கொசுக்கள் தீண்ட முடியுமா?

எப்போது ஒரு மகான் தன்னுடைய இரத்தத்தை மக்களுக்காக அர்ப்பணிக்க திருவுள்ளம் கொள்கிறாரோ அப்போது இந்த காருண்ய கொசுக்களை அழைத்து தன்னுடையஉடம்பில் குறிப்பிட்ட பகுதியிலிருந்து குறிப்பிட்ட அளவு இரத்தத்தை உறிஞ்சிக் கொள்ள அனுமதி அளிக்கிறார். அவ்வாறு உறிஞ்சிய இரத்தத் துளிகளை அந்த மகான் குறிப்பிடும் தீர்த்தத்தில் குறிப்பிட்ட சுப முகூர்த்தத்தில் சேர்ப்பதே காருண்ய கொசுக்களின் திருப்பணி.
காருண்ய கொசுக்களுக்கு சாதாரண கொசுக்களைப் போல பத்தாயிரம் ஜீவன்களைக் கடிக்க வேண்டும் என்ற நியதி கிடையாது. ஒரு மகான் உடலில் ஒரு துளி இரத்தத்தை உறிஞ்சி திருப்பணி ஆற்றி விட்டால் போதும் அடுத்த வினாடி அவை முக்தி அடைந்து அடுத்த பிறவிக்கு ஆயத்தமாகி விடுகின்றன.
மகான்களின் ஆன்மீக நிலையைப் பொறுத்து ஒரு மகானின் உடலில் உள்ள ஒரு துளி இரத்தம் குறைந்தது ஒரு லட்சம் மக்களின் கர்ம வினையைக் களையக் கூடியது. அப்படியானால் மகான்கள் எத்தகைய புண்ணிய சக்திகளுடன் இந்த பூமியில் உலவி வருகிறார்கள் என்று சற்றே சிந்தித்துப் பாருங்கள். இங்கு இன்னொரு முக்கியமான விஷயத்தையும் கவனிக்க வேண்டும். ஒரு மகானின், உத்தமரின் ஒரு துளி இரத்தம் ஒரு லட்சம் மக்களைக் கரையேற்றும் சக்தி பெற்றது என்றால் ஒரு மகானை இம்சைப்படுத்தி அவர் உடலிலிருந்து ஒரே ஒரு துளி இரத்தம் பூமியில் சிந்தினால் கூட அது எத்தனை லட்சம் மக்களை வேதனைக்குள்ளாக்கும் என்பதையும் ஆழ்ந்து சிந்தித்துப் பார்க்க வேண்டும் .

மனிதனால் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிற்கு வலிமை வாய்ந்த சூறாவளிக் காற்று, பூகம்பம், இடி, மின்னல், மழை போன்ற இயற்கை சக்திகள் லட்சக் கணக்கான மக்களை அழிப்பதற்குக் காரணம் மகான்களின் வேதனையில் வெளியாகும் இரத்தத் துளிகளே என்பதை மக்களை இனியாவது உணர்ந்து விழிப்புடன் செயல்பட வேண்டும். எந்த ஒரு மகானும் தான் மகான் என்று விளம்பரப்படுத்திக் கொள்வதில்லை. அதனால் மக்கள் அனைவரையுமே தங்கள் சகோதர, சகோதரிகளாக, உத்தமர்களாக நினைத்து அன்புடன் நடத்துவதால் எந்நிலையிலும் மகான்கள் துன்புறாத அமைதி நிலை சமுதாயத்தில் உருவாகும்.

மகாமகத் திருக்குளம், கங்கை, காவிரி போன்ற தீர்த்தங்களில் எண்ணற்ற மகான்களின் இரத்தத் துளிகள் கலந்துள்ளது. அதனால்தான் கும்பமேளா, மாசி மகம் போன்ற சிறப்பான தீர்த்த வாரி தினங்களில் எத்தனை லட்சம் மக்கள் நீராடினாலும் அந்த தீர்த்தங்கள் சற்றும் மாசு பெறாமல் தெய்வீகத் தீர்த்தங்களாகவே பொலிந்து தொடர்ந்து மக்களுக்கு அனுகிரக சக்திகளை வாரி வழங்கிக் கொண்டிருக்கின்றன.

காஞ்சீபுரம் ஸ்ரீ ஏகாம்பரநாதர் தேவாலயத்தில் ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக மக்களுக்கு அருந் தொண்டாற்றி அற்புத சேவை சாதித்த கருணை வள்ளலே ஸ்ரீபோடா சித்தர் ஆவார். இவரைச் சுற்றி எப்போதும் கொசுக்கள் பறந்து கொண்டே இருக்கும். உண்மையில் இந்திரன், பிரம்மா போன்ற தேவர்களும் பற்பல ரிஷிகளும் கொசு வடிவில் ஸ்ரீபோடா சித்தரை தரிசனம் செய்வதையே நாம் கொசு பறப்பதாக எண்ணிக் கொள்கிறோம். இத்தகைய கொசுக்களை அவநந்தி கொசுக்கள் என்ற சித்த பரிபாஷையில் அழைப்பதுண்டு.

மகான்களைக் கண்ணால் காண்பது அரிது. அவர்கள் அனுமதித்தால் மட்டுமே அவர்கள் திருமேனியைக் காண முடியும். அப்படி இருக்கும்போது சிவபெருமானுக்கே திருமணம் நிகழ்த்தி வைத்த போடா சித்தர் போன்ற அற்புத சித்தர்களை சாதாரண மனிதர்கள் காண்பது எப்படி? இவ்வாறு மிக உன்னத மகான்களின் அனுகிரக சக்திகளை சாதாரண மக்களும் பெறுவதற்காக சூரிய பகவான், சந்திரன், இந்திரன் போன்ற தேவர்கள் கொசு வடிவில் இத்தகைய மகான்களைச் சுற்றி பறந்து அவர்களிடமிருந்து அற்புத சக்திகளை ஈர்த்து அதை பூமியில் உள்ள சாதாரண மக்களும் கிரகிக்கும் அளவிற்கு மென்மையாக்கி அளிக்கின்றனர்‘. இறை அவதாரங்களைப் போல தேவர்கள் செயல்படுவதால் அவர்களின் உருவங்களை ”அவநந்தி” என்ற அடைமொழியால் குறிப்பிடுகின்றோம்.

திருக்கார்த்திகை தீபத்தின் போதும் திருஅண்ணாமலையில் இத்தகைய அற்புத அனுகிரக சக்தி பரிமாற்றத்தைக் காணலாம். தீபம் ஏற்றும் சில நிமிடங்களுக்கு முன்னர் அனைத்து தேவ லோகங்களிலிருந்தும் தேவர்கள் தங்கள் ஒளி பொருந்திய வாகனங்களில் வந்து திருஅண்ணாமலையாரைச் சுற்றி பவனி வருவார்கள். அது ஒரு மேகக் கூட்டம் போல் சாதாரண மக்கள் கண்களுக்குத் தோன்றும். தீபம் ஏற்றிய பின்னர் திருஅண்ணாமலை தீப சக்தியை மென்மையாக்கி பூலோக மக்களுக்கு அனுகிரக சக்திகளாக அளித்து விட்டு தங்கள் லோகங்களுக்கு திரும்பிச் சென்று விடுவார்கள்.

ஒவ்வொரு திருக்கார்த்திகை தீபத் திருவிழா அன்றும் நடக்கும் கோடிக் கணக்கான தெய்வீக அற்புதங்களில் இதுவும் ஒன்று. கன்னியா குமரி திருத்தலத்தில் குடிகொண்ட மாயம்மாவைச் சுற்றியும் இத்தகைய அவநந்தி கொசுக்கள் அடிக்கடி பறப்பதுண்டு. தூய வெண்ணிறத்துடன் பொலிவதால் இத்தகைய கொசுக்களை எளிதில் அடையாளம் கண்டு கொள்ள முடியும்.

நன்றி : http://www.kulaluravuthiagi.in/kosu.htm

Worship for Mother Abirami (அபிராமி அந்தாதி-1)


துணையும் தொழும் தெய்வமும் பெற்ற தாயும் ! 







உலகினில் தற்போது மக்கள் தொகை பல கோடி. எல்லோருக்கும் இன்பமும் துன்பமும் பல கோடி. காரணம் நன்மை குறைவும், தீமை அதிகரிப்புமே. மேலும் யாவரிடம்  பொறுமை, சகிப்புத்தன்மை  குறைவும், சலிப்பும் பேராசையும் நிறைந்து விட்டன. துரதிர்ஷ்டவசமாக தீமைகளின் கரங்கள் மிக ஓங்கிய இக்கலியுகத்தினில்  எதை செய்தால் நல்லது நடக்கும், எதை தின்றால் பித்தம் தெளியும் என்கிற விதத்தினில் மனித வாழ்க்கை சென்று கொண்டிருக்கிறது ! 

எதற்கும் "மனம் இருந்தால் மார்க்கம் உண்டு" என்பதற்கிணங்க, எத்தகைய துன்பத்தையும் தாங்கி கடந்து செல்ல ஒரு வழியாக இந்த "அபிராமி அந்தாதி" திகழ்கின்றது என்பதில் ஐயமில்லை. பகுதி -1 இல் உள்ள 50 அந்தாதிகளையும் அவரவர் குறைகளின் தன்மைக்கேற்றபடி பகுதியாகவோ மொத்தமாகவோ நம்பிக்கையுடன் அம்பிகையை துதித்து வர வாழ்க்கை சிறக்கும். 

கணபதி காப்பு   

தார் அமர் கொன்றையும் சண்பக மாலையும் சாத்தும் தில்லை 
ஊரர்தம் பாகத்து உமை மைந்தனே.-உலகு ஏழும் பெற்ற 
சீர் அபிராமி அந்தாதி எப்போதும் எந்தன் சிந்தையுள்ளே- 
கார் அமர் மேனிக் கணபதியே.-நிற்கக் கட்டுரையே. --- காப்பு

கொன்றை மாலையும், சண்பக மாலையும் அணிந்து நிற்கும் தில்லையம்பதி நாயகனுக்கும், அவன் ஒரு பாதியாய் நிற்கும் உமைக்கும் மைந்தனே! மேகம் போன்ற கருநிற மேனியை உடைய பேரழகு விநாயகரே! ஏழுலகையும் பெற்ற சீர் பொருந்திய அபிராமித் தாயின் அருளையும், அழகையும் எடுத்துக்கூறும் இவ்வந்தாதி எப்பொழுதும் என் சிந்தையுள்ளே உறைந்து இருக்க அருள் புரிவாயாக.


ஞானமும் நல் வித்தையும் பெற 

1: உதிக்கின்ற செங்கதிர், உச்சித் திலகம், உணர்வுடையோர் 
மதிக்கின்ற மாணிக்கம், மாதுளம்போது, மலர்க்கமலை 
துதிக்கின்ற மின் கொடி, மென் கடிக் குங்கும தோயம்-என்ன
விதிக்கின்ற மேனி அபிராமி, எந்தன் விழுத் துணையே:

உதய சூரியனின் செம்மையான கதிரைப் போலவும், உச்சித்திலகம் என்கிற செம்மலரைப் போலவும், போற்றப்படுகின்ற மாணிக்கத்தைப் போலவும், மாதுள மொட்டைப் போலவும், ஒத்து விளங்கும் மென்மையான மலரில் வீற்றிருக்கின்ற திருமகளும் துதிக்கக்கூடிய வடிவையுடையவள் என் அபிராமியாகும். அவள் கொடி மின்னலைப் போன்றும், மணம் மிகு குங்குமக் குழம்பு போன்றும் சிவந்த மேனியுடையவள். இனி அவளே எனக்குச் சிறந்த துணையாவாள்.


பிரிந்தவர் ஒன்று சேர 

2: துணையும், தொழும் தெய்வமும் பெற்ற தாயும், சுருதிகளின் 
பணையும் கொழுந்தும் பதிகொண்ட வேரும்-பனி மலர்ப்பூங்
கணையும், கருப்புச் சிலையும், மென் பாசாங்குசமும், கையில்
அணையும் திரிபுர சுந்தரி-ஆவது அறிந்தனமே.

அபிராமி அன்னையை நான் அறிந்து கொண்டேன். அவளே எனக்குத் துணையாகவும், தொழுகின்ற தெய்வமாகவும், பெற்ற தாயாகவும் விளங்குகின்றாள். வேதங்களில் தொழிலாகவும், அவற்றின் கிளைகளாகவும், வேராகவும் நிலைபெற்று இருக்கின்றாள். அவள் கையிலே குளிர்ந்த மலர் அம்பும், கரும்பு வில்லும், மெல்லிய பாசமும், அங்குசமும் கொண்டு விளங்குகின்றாள். அந்தத் திரிபுர சுந்தரியே எனக்குத் துணை.



குடும்ப கவலையிலிருந்து விடு பட 

3: அறிந்தேன், எவரும் அறியா மறையை, அறிந்துகொண்டு
செறிந்தேன், நினது திருவடிக்கே,-திருவே.- வெருவிப்
பிறிந்தேன், நின் அன்பர் பெருமை எண்ணாத கரும நெஞ்சால்,
மறிந்தே விழும் நரகுக்கு உறவாய மனிதரையே.

அருட்செல்வத்தை அன்பர்களுக்கு வழங்கும் அபிராமியே! நின் பெருமையை உணர்த்தும் அடியார்களின் கூட்டுறவை நான் நாடியதில்லை. மனத்தாலும் அவர்களை எண்ணாத காரணத்தால் தீவினை மிக்க என் நெஞ்சானது நரகத்தில் வீழ்ந்து மனிதரையே நாடிக் கொண்டிருந்தது. இப்பொழுது நான் அறிந்து கொண்டேன். ஆதலினால் அத்தீயவழி மாக்களை விட்டுப் பிரிந்து வந்து விட்டேன். எவரும் அறியாத வேதப் பொருளை தெரிந்து கொண்டு உன் திருவடியிலேயே இரண்டறக் கலந்து விட்டேன். இனி நீயே எனக்குத் துணையாவாய்.


உயர் பதவிகளை அடைய 

4: மனிதரும், தேவரும், மாயா முனிவரும், வந்து, சென்னி
குனிதரும் சேவடிக் கோமளமே.கொன்றை வார்சடைமேல்
பனிதரும் திங்களும், பாம்பும்,பகீரதியும் படைத்த
புனிதரும் நீயும் என் புந்தி எந்நாளும் பொருந்துகவே.

மனிதர், தேவர், பெரும் தவமுனிவர் முதலியோர் தலை வைத்து வணங்கும் அழகிய சிவந்த பாதங்களுடைய கோமளவல்லியே! தன்னுடைய நீண்ட சடாமுடியில் கொன்றையும், குளிர்ச்சி தரும் இளம் சந்திரனையும், அரவையும், கங்கையையும் கொண்டு விளங்குகின்ற புனிதரான சிவபெருமானும் நீயும் இடையறாது என் மனத்திலே ஆட்சியருள வேண்டும்.


மனக்கவலை தீர 

5: பொருந்திய முப்புரை, செப்பு உரைசெய்யும் புணர் முலையாள், 
வருந்திய வஞ்சி மருங்குல் மனோன்மணி, வார் சடையோன் 
அருந்திய நஞ்சு அமுது ஆக்கிய அம்பிகை, அம்புயமேல் 
திருந்திய சுந்தரி, அந்தரி-பாதம் என் சென்னியதே.

அபிராமி அன்னையே! உயிர்களிடத்திலே படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மூவகை நிலைகளிலும், நிறைந்து இருப்பவளே! மாணிக்க பூண் அணிந்த நெருக்கமான, அடர்ந்த தனங்களின் சுமையால் வருந்துகின்ற வஞ்சிக் கொடி போன்ற இடையை உடையவளே! மனோன்மணியானவளே! (அன்பர்களை ஞான நிலைக்கு கொண்டு செல்கின்றவள்) நீண்ட சடையை உடைய சிவபெருமான் அன்றொரு நாள் அருந்திய விஷத்தை அமுதமாக்கிய அழகிய தேவி! நீ வீற்றிருக்கும் தாமரையைக் காட்டிலும் மென்மையான நின் திருவடிகளையே, என் தலைமேல் கொண்டேன்.


மந்திர சித்தி பெற 

6: சென்னியது, உன் பொன் திருவடித் தாமரை. சிந்தையுள்ளே 
மன்னியது, உன் திரு மந்திரம்,- சிந்துர வண்ணப் பெண்ணே.- 
முன்னியநின் அடியாருடன் கூடி, முறை முறையே 
பன்னியது, என்றும் உந்தன் பரமாகம பத்ததியே.

செம்மையான திருமேனியுடைய அபிராமித் தாயே! என்றும் என் தலைமேல் இருக்கக்கூடியது, நின் அழகிய திருவடியே! என்றும் என் சிந்தையுள்ளே நிலை பெற்று இருக்கக் கூடியது, நின் திருமந்திரமே! செந்தூர நிறமுடைய அழகிய தேவி, நான் இனி என்றும் கலந்திருப்பது நின்னையே மறவாது தொழும் அடியார்களையே! நான் தினந்தோறும் பாராயணம் செய்வது, உன்னுடைய மேலான ஆகம நெறியையே!


மலையென வருந் துன்பம் பணியென நீங்க 

7: ததியுறு மத்தின் சுழலும் என் ஆவி, தளர்வு இலது ஓர் 
கதியுறுவண்ணம் கருது கண்டாய்-கமலாலயனும், 
மதியுறுவேணி மகிழ்நனும், மாலும், வணங்கி, என்றும் 
துதியுறு சேவடியாய். சிந்துரானன சுந்தரியே.

தாமரை மலரில் உதித்தவனும், கலைமகளின் கொழுநனும் ஆகிய பிரம்மனும், திருமாலும் வணங்கிப் போற்றுகின்ற சிவந்த பாதங்களையுடைய செந்தூரத் திலகம் கொண்டு விளங்கும் பேரழகானவளே! தயிரைக் கடையும் மத்துப் போன்று உலகில் பிறப்பு இறப்பு என்று சுழன்று வருந்தாமல் என் உயிர் நல்லதொரு மோட்ச கதியையடைய அருள் புரிவாயாக!


பற்றுகள் நீங்கி பக்தி பெருகிட 

8: சுந்தரி எந்தை துணைவி, என் பாசத்தொடரை எல்லாம் 
வந்து அரி சிந்துர வண்ணத்தினாள், மகிடன் தலைமேல் 
அந்தரி, நீலி, அழியாத கன்னிகை, ஆரணத்தோன் 
கம் தரி கைத்தலத்தாள்-மலர்த்தாள் என் கருத்தனவே

என் அபிராமி அன்னையே பேரழகானவள். அவள் என் தந்தை சிவபெருமானின் துணைவி. என்னுடைய அகம், புறமாகிய அனைத்து பந்த பாசங்களையும் போக்கக் கூடியவள். செந்நிறத் திருமேனியாள். அன்றொருநாள் மகிஷாசுரனின் தலை மேல் நின்று, அவனை வதம் செய்தவள் (அகந்தையை அழித்தவள்). நீல நிறமுடைய நீலி என்னும் கன்னியானவள். தன்னுடைய கையில் பிரம்ம கபாலத்தைக் கொண்டிருப்பவள். அவளுடைய மலர்த்தாளையே என்றும் என் கருத்தில் கொண்டுள்ளேன்.


அனைத்தும் வசமாக 

9: கருத்தன எந்தைதன் கண்ணன,வண்ணக் கனகவெற்பின் 
பெருத்தன, பால் அழும் பிள்ளைக்கு நல்கின, பேர் அருள்கூர் 
திருத்தன பாரமும், ஆரமும், செங்கைச் சிலையும், அம்பும், 
முருத்தன மூரலும், நீயும், அம்மே. வந்து என்முன் நிற்கவே.

அபிராமித்தாயே! என் தந்தை சிவபெருமானின் கருத்திலும், கண்ணிலும் நின்று விளங்கக் கூடியது, பொன் மலையென மதர்த்து நிற்கும் நின் திருமுலையே ஆகும். அம்முலையே நீ உயிர்களிடத்தில் காட்டும் பரிவைக் காட்டுவதற்காக அமுதப் பிள்ளையாகிய ஞானசம்பந்தருக்கு பால் நல்கியது. இப்படிப்பட்ட அருள்மிக்க கனமான கொங்கையும், அதில் விளங்கக் கூடிய ஆரமும், சிவந்த கைகளில் விளங்கும் வில்லும் அம்பும், நின்னுடைய சிவந்த இதழ் நகையும் என் முன் காட்சியருள வேண்டும்.


மோட்ச சாதனம் பெற 

10: நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பது உன்னை, 
என்றும் வணங்குவது உன் மலர்த் தாள்.-எழுதாமறையின் 
ஒன்றும் அரும்பொருளே. அருளே. உமையே. இமயத்து 
அன்றும் பிறந்தவளே. அழியா முத்தி ஆனந்தமே.

அறிதற்கரிய பொருளே! அருளே உருவான உமையே! அக்காலத்தில் இமயமலையில் பிறந்தவளே! என்றும் அழியாத முக்தி ஆனந்தமாக விளங்குபவளே! உணர்தற்கரிய பெருமை வாய்ந்த வேதப் பொருளில் ஒன்றிய பொருளே! நான் நின்றாலும், இருந்தாலும், கிடந்தாலும், எந்நிலையில் இருப்பினும் நின்னையே நினைத்து தியானிக்கின்றேன். நான் வணங்குவதும் நின் மலர் போன்ற பாதங்களையே யாகும்.


இல்வாழ்க்கையில் இன்பம் பெற 

11: ஆனந்தமாய், என் அறிவாய், நிறைந்த அமுதமுமாய், 
வான் அந்தமான வடிவு உடையாள், மறை நான்கினுக்கும் 
தான் அந்தமான, சரணாரவிந்தம்-தவள நிறக் 
கானம் தம் ஆடரங்கு ஆம் எம்பிரான் முடிக் கண்ணியதே.

அபிராமித்தாய் என் ஆனந்தமாகவும், என் அறிவாகவும் விளங்குகின்றாள். என் வாழ்வில் அமுதமாக நிறைந்திருக்கின்றாள். அவள் ஆகாயத்தில் தொடங்கி மண், நீர், நெருப்பு, காற்று என்ற ஐம்பெரும் வடிவுடையவள். வேதம் நான்கினுக்கும் தானே தொடக்கமாகவும், முடிவாகவும் இருப்பவள். இப்படிப்பட்ட தாயின் திருவடித் தாமரைகள், திருவெண் காட்டில் திருநடனம் புரியும் எம்பிரான் ஈசன் முடிமேல் தலைமாலையாகத் திகழ்வன.


தியானத்தில் நிலை பெற 

12: கண்ணியது உன் புகழ், கற்பது உன் நாமம், கசிந்து பக்தி 
பண்ணியது உன் இரு பாதாம்புயத்தில், பகல் இரவா 
நண்ணியது உன்னை நயந்தோர் அவையத்து-நான் முன்செய்த 
புண்ணியம் ஏது? என் அம்மே. புவி ஏழையும் பூத்தவளே.

என் அம்மையே! அபிராமித்தாயே! ஏழ் உலகையும் பெற்றவளே! நான் எப்பொழுதும் ஊனுருக நினைவது உன்புகழே! நான் கற்பதோ உன் நாமம். என் மனம் கசிந்து பக்தி செய்வதோ உன் திருவடித் தாமரை. நான் இரவென்றும், பகலென்றும் பாராமல் சென்று சேர்ந்திருப்பது உன் அடியார் கூட்டம். இவைகளுக்கெல்லாம் தாயே! நான் செய்த புண்ணியம்தான் என்ன!


வைராக்கிய நிலை எய்த 

13: பூத்தவளே, புவனம் பதினான்கையும். பூத்தவண்ணம் 
காத்தவளே. பின் கரந்தவளே. கறைக்கண்டனுக்கு 
மூத்தவளே. என்றும்மூவா முகுந்தற்கு இளையவளே. 
மாத்தவளே. உன்னை அன்றி மற்று ஓர் தெய்வம் வந்திப்பதே?

உலகம் பதினான்கையும் பெற்றவளே! எப்படிப் பெற்றாயோ, அப்படியே உலகத்தைக் காப்பவளே! பின்பு ஏதோ ஒரு காரணம் கருதி, உலகத்தை உன்னில் அடக்கிக் கொண்டவளே! கறைக் கண்டனுக்கு (ஆலகால விஷத்தை உண்டதால் கறை எனப்பட்டது) மூத்தவளே! (ஆதி சக்தியிலிருந்தே சிவன், பிரம்மா, விஷ்ணு முதலானோர் தோன்றினார்கள் என்பது வரலாறு) என்றும் சீர் இளமை பொருந்திய திருமாலுக்குத் தங்கையே! அருந்தவத்தின் தலைவியே! அபிராமி அன்னையே! உன்னையன்றி மற்றொரு தெய்வத்தை வணங்கேன்.


தலைமை பெற 

14: வந்திப்பவர் உன்னை, வானவர் தானவர் ஆனவர்கள், 
சிந்திப்பவர், நல்திசைமுகர் நாரணர், சிந்தையுள்ளே 
பந்திப்பவர், அழியாப் பரமானந்தர், பாரில் உன்னைச் 
சந்திப்பவர்க்கு எளிதாம் எம்பிராட்டி. நின் தண்ணளியே:

ஏ அபிராமி அன்னையே! உன்னை வணங்குபவர்கள் தேவர்கள், அசுரர்கள், மற்றும் உன்னை விரும்பிப் பல காலமும் தொழும் அடியார்கள்! நான்கு முகங்களையுடைய பிரம்மனும் விஷ்ணுவுமே உன்னைச் சிந்திப்பவர்கள்! நின்னை மனத்திற்கு கட்டுப்படுத்தியவர் என்றும் அழியாத பரமானந்த நாதனாகிய சிவபெருமானே! இவர்களைக் காட்டிலும் உலகத்தில் நின்னைத் தரிசனம் செய்வார்க்கே நீ எளிதில் அருள் புரிகின்றாய். என் தாயே! உன் கருணைதான் என்னே! வியத்தற்குரிய தன்மையது!


பெருஞ் செல்வமும் பேரின்பமும் பெற 

15: தண்ணளிக்கு என்று, முன்னே பல கோடி தவங்கள் செய்வார், 
மண் அளிக்கும் செல்வமோ பெறுவார்? மதி வானவர் தம் 
விண் அளிக்கும் செல்வமும் அழியா முத்தி வீடும், அன்றோ?- 
பண் அளிக்கும் சொல் பரிமள யாமளைப் பைங்கிளியே.

அன்னையே! அபிராமித் தாயே! இசையை எழுப்பக்கூடிய அழகிய இன்சொல் கூறும் எம் பசுங்கிளியே! நின் திருவருள் நாடிப் பலகோடி தவங்களைச் செய்தவர்கள் இவ்வுலகத்தில் கிடைக்கக் கூடிய செல்வங்களை மட்டுமா பெறுவர்? சிறந்த தேவேந்திரன் ஆட்சி செய்யக்கூடிய விண்ணுலக போகத்தையும் பெறுவர். மற்றும், அழியாத முக்திப் பேற்றையும் அடைவார்கள் அல்லவா!


முக்காலமும் உணரும் திறன் உண்டாக 

16: கிளியே, கிளைஞர் மனத்தே கிடந்து கிளர்ந்து ஒளிரும் 
ஒளியே, ஒளிரும் ஒளிக்கு இடமே, எண்ணில் ஒன்றும் இல்லா 
வெளியே, வெளி முதல் பூதங்கள் ஆகி விரிந்த அம்மே.- 
அளியேன் அறிவு அளவிற்கு அளவானது அதிசயமே.

கிளி போன்றவளே! தாயே! உன்னை நினைந்து வழிபடும் அடியார் மனத்தினிலே சுடர் விட்டுப் பிரகாசிக்கும் ஒளியே! அவ்வாறு ஒளிரும் ஒளிக்கு நிலையாக இருப்பவளே! ஒன்றுமே இல்லாத அண்டமாகவும், அவ்வண்டத்தினின்று ஐம்பெரும் பூதங்களாகவும் விரிந்து நின்ற தாயே! எளியேனாகிய என் சிற்றறிவுக்கு நீ எட்டுமாறு நின்றதும் அதிசயமாகும்!


கன்னிகைகளுக்கு நல்ல வரன் அமைய 

17: அதிசயம் ஆன வடிவு உடையாள், அரவிந்தம் எல்லாம் 
துதி சய ஆனன சுந்தரவல்லி, துணை இரதி 
பதி சயமானது அபசயம் ஆக, முன் பார்த்தவர்தம் 
மதி சயம் ஆக அன்றோ, வாம பாகத்தை வவ்வியதே?

அபிராமி அன்னை அதிசயமான அழகுடையவள்! அவள் தாமரை போன்ற மலர்களெல்லாம் துதிக்கக் கூடிய வெற்றி பொருந்திய அழகிய முகத்தையுடையவள்; கொடி போன்றவள்; அவள் கணவன் முன்பு ஒருநாள் மன்மதனின் வெற்றிகளையெல்லாம் தோல்வியாக நெற்றிக் கண்ணைத் திறந்து பார்த்தார். அப்படிப்பட்டவரின் மனத்தையும் குழையச் செய்து, அவருடைய இடப் பாகத்தைக் கவர்ந்து கொண்டாள், வெற்றியுடைய தேவி.


மரண பயம் நீங்க 

18: வவ்விய பாகத்து இறைவரும் நீயும் மகிழ்ந்திருக்கும் 
செவ்வியும், உங்கள் திருமணக் கோலமும், சிந்தையுள்ளே 
அவ்வியம் தீர்த்து என்னை ஆண்டபொற் பாதமும் ஆகிவந்து- 
வெவ்விய காலன் என்மேல் வரும்போது-வெளி நிற்கவே.

அபிராமித் தாயே! என் அகப்பற்று, புறப்பற்று ஆகிய பாசங்களை அகற்றி, என்னை ஆட்கொண்டு அருளிய நின் பொற்பாதங்களோடு, எந்தை எம்பிரானோடு இரண்டறக் கலந்திருக்கும் அர்த்த நாரீஸ்வரர் அழகும், தனித்தனி நின்று காட்சி தரும் திருமணக்கோலமும், கொடிய காலன் என்மேல் எதிர்த்து வரும் காலங்களில் காட்சியருள வேண்டும்.


பேரின்ப நிலை அடைய 

19: வெளிநின்ற நின்திருமேனியைப் பார்த்து, என் விழியும் நெஞ்சும் 
களிநின்ற வெள்ளம் கரைகண்டது, இல்லை, கருத்தினுள்ளே 
தெளிநின்ற ஞானம் திகழ்கின்றது, என்ன திருவுளமோ?- 
ஒளிநின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே.

ஒளி பொருந்திய ஒன்பது கோணங்களில் (நவசக்தி) உறைகின்ற தாயே! நின் திருமணக் காட்சி தருவதைக் கண்ட என் கண்களும், நெஞ்சும் கொண்ட மகிழ்ச்சி வெள்ளத்திற்கு இதுவரை ஒரு கரை கண்டதில்லை. ஆயினும் தெளிந்த ஞானம் இருப்பதை உணர்கிறேன். இது உன்னுடைய திருவருள் பயனேயாகும்.



வீடு வாசல் முதலிய செல்வங்கள் உண்டாக 

20: உறைகின்ற நின் திருக்கோயில்-நின் கேள்வர் ஒரு பக்கமோ, 
அறைகின்ற நான் மறையின் அடியோ முடியோ, அமுதம் 
நிறைகின்ற வெண் திங்களோ, கஞ்சமோ, எந்தன் நெஞ்சகமோ, 
மறைகின்ற வாரிதியோ?- பூரணாசல மங்கலையே.

என்றும் பூரணமாய் விளங்குகின்ற அபிராமி அன்னையே! நீ வீற்றிருக்கும் திருக்கோயில் நின் கொழுநராகிய சிவபெருமானின் ஒரு பாகமோ? அன்றி, ஓதப்படுகின்ற நான்கு வேதங்களின் ஆதியோ? அந்தமோ? அன்றியும், அமிர்தம் போன்ற குளிர்ந்த முழுச்சந்திரனேயன்றி வெண் தாமரையோ? இல்லை, என்னுடைய நெஞ்சம்தானேயோ அல்லது செல்வமெல்லாம் மறைந்திருகக் கூடிய பாற் கடலோ? தாயே! நீ எங்கும் நிறைந்திருப்பதால் எதில் என்று தோன்றவில்லையே!


அம்பிகையை வழிபடாமல் இருந்த பாவம் தொலைய 

21: மங்கலை, செங்கலசம் முலையாள், மலையாள், வருணச் 
சங்கு அலை செங்கைச் சகல கலாமயில் தாவு கங்கை 
பொங்கு அலை தங்கும் புரிசடையோன் புடையாள், உடையாள் 
பிங்கலை, நீலி, செய்யாள், வெளியாள், பசும் பெண்கொடியே.

அம்மா அபிராமி! என்றும் பசுமையான பெண் கொடியாக விளங்குபவளே! என்றும் சுமங்கலியே! செங்கலசம் போன்ற தனங்களையுடையவளே! உயர்ந்த மலையிலே உதித்தவளே! வெண்மையான சங்கு வளையல்களை அணியும் செம்மையான கரங்களையுடையவளே! சகல கலைகளும் உணர்ந்த மயில் போன்றவளே! பாய்கின்ற கங்கையை, நுரை கடலைத் தன் முடியிலே தரித்த சிவபெருமானின் ஒரு பாதி ஆனவளே! என்றும் பக்தர்களையுடையவளே! பொன் நிறமுடையவளே! கருநிறமுடைய நீலியே! சிவந்த மேனியாகவும் விளங்குகின்றவளே!


இனிப்பிறவா நெறி அடைய 

22: கொடியே, இளவஞ்சிக் கொம்பே, எனக்கு வம்பே பழுத்த 
படியே மறையின் பரிமளமே, பனி மால் இமயப் 
பிடியே, பிரமன் முதலாய தேவரைப் பெற்ற அம்மே. 
அடியேன் இறந்து இங்கு இனிப் பிறவாமல் வந்து ஆண்டு கொள்ளே.

கொடியானவளே! இளமையான வஞ்சிப் பொற் கொம்பே! தகுதியற்ற எனக்குத் தானே முன் வந்து அருளளித்த கனியே! மணம் பரப்பும் வேத முதற் பொருளே! பனி உருகும் இமயத்தில் தோன்றிய பெண் யானை போன்றவளே! பிரம்மன் முதலாகிய தேவர்களைப் பெற்றெடுத்த தாயே! அடியேன் இப்பிறவியில் இறந்தபின், மீண்டும் பிறவாமல் தடுத்தாட் கொள்ள வேண்டும்.


எப்போதும் மகிழ்ச்சியாய் இருக்க 

23: கொள்ளேன், மனத்தில் நின் கோலம் அல்லாது, அன்பர் கூட்டந்தன்னை 
விள்ளேன், பரசமயம் விரும்பேன், வியன் மூவுலகுக்கு 
உள்ளே, அனைத்தினுக்கும் புறம்பே, உள்ளத்தே விளைந்த 
கள்ளே, களிக்குங்களியே, அளிய என் கண்மணியே.

அபிராமித் தாயே! நின்னுடைய கோலமில்லாத வேறொரு தெய்வத்தை மனத்தில் கொள்ளேன். நின்னுடைய அடியார்கள் கூட்டத்தைப் பகைத்துக் கொள்ள மாட்டேன். உன்னையன்றி பிற சமயங்களை விரும்ப மாட்டேன். மூன்றுலகங்கட்கு (மண், விண், பாதாளம்) உள்ளேயும், யாவற்றினுக்கும் வெளியேயும் நிறைந்திருப்பவளே! எம்முடைய உள்ளத்திலே ஆனந்தக் களிப்பை உண்டாக்கும் கள்ளே! ஆனந்தத்திற்கு ஆனந்தமானவளே! எளியேனாகிய எனக்கும் அருள் பாலித்த என் கண்மணி போன்றவளே!


நோய்கள் விலக 

24: மணியே, மணியின் ஒளியே, ஒளிரும் மணி புனைந்த 
அணியே, அணியும் அணிக்கு அழகே, அணுகாதவர்க்குப் 
பிணியே, பிணிக்கு மருந்தே, அமரர் பெரு விருந்தே.- 
பணியேன், ஒருவரை நின் பத்ம பாதம் பணிந்தபின்னே.

அபிராமித்தாயே! மணியாக விளங்குபவளே! அம் மணியில் உண்டாகும் ஒளியாகவும் விளங்குபவளே! ஒளி பொருந்திய நவமணிகளால் இழைக்கப்பட்ட அணியாகவும், அந்த அணிக்கு அழகாகவும் திகழ்பவளே! நின்னை அணுகாதவர்க்குப் பிணியென நிற்பவளே! நின்னை அண்டிவரும் பாபாத்துமாக்களின் பிணிக்கு மருந்தாகவும் நிற்பவளே! தேவர்களுக்கு பெரும் விருந்தாய்த் தோன்றும் அன்னையே! நின் அழகிய தாமரை போலுள்ள சேவடியைப் பணிந்த பின்னே, வேறொரு தெய்வத்தை வணங்க மனத்தாலும் நினையேன்.


நினைத்த காரியம் நிறைவேற 

25: பின்னே திரிந்து, உன் அடியாரைப் பேணி, பிறப்பு அறுக்க, 
முன்னே தவங்கள் முயன்று கொண்டேன்,- முதல் மூவருக்கும் 
அன்னே. உலகுக்கு அபிராமி என்னும் அருமருந்தே.- 
என்னே?-இனி உன்னை யான் மறவாமல் நின்று ஏத்துவனே.

அம்மையே! மும்மூர்த்திகளின் தாயாக விளங்குபவளே! மூவுலகத்திற்கும் கிடைத்த அருமருந்தே! இனி நான் பிறவாமல் இருக்க, முன்னதாகவே தவங்கள் பல முயன்று செய்து கொண்டேன். அதற்காகவே நின் அடியார்கள் பின் திரிந்து அவர்களுக்குப் பணி செய்து வருகின்றேன். அம்மா! அபிராமித்தாயே! நான் முன் செய்த தவப் பயனே, இப்பிறவியில் உன்னை மறவாமல் நல்வழி நின்று வணங்குகின்றேன். இன்னும் வணங்கிக் கொண்டேயிருப்பேன்.


சொல்வாக்கும் செல்வாக்கும் பெருக 

26: ஏத்தும் அடியவர், ஈரேழ் உலகினையும் படைத்தும் 
காத்தும் அழித்தும் திரிபவராம்,- கமழ்பூங்கடம்பு 
சாத்தும் குழல் அணங்கே.- மணம் நாறும் நின் தாளிணைக்கு என் 
நாத் தங்கு புன்மொழி ஏறியவாறு, நகையுடைத்தே.

பதினான்கு உலகினையும் முறையாகப் படைத்தும், காத்தும், அழித்தும் தொழில் புரியும் தேவாதி தேவர்கள் முறையே பிரம்மா, விஷ்ணு, சிவன் என்னும் மும்மூர்த்திகளாவார்கள். இம் மும்மூர்த்திகளும் போற்றி வணங்கக்கூடிய அன்னை, அபிராமியேயாகும். இத்துணை பெருமையும், மணம் வீசுகின்ற கடம்ப மாலையையும் அணிந்தவளாகிய ஆரணங்கே! மணம் வீசுகின்ற நின் இணையடிகளில், எளியேனாகிய என்னுடைய நாவினின்று தோன்றிய வார்த்தைகளைச் (அபிராமி அந்தாதி) சாத்துகின்றேன். அவ்வாறு நின் திருவடியில் என் பாடல் ஏற்றம் பெற்றிருப்பது, எனக்கே நகைப்பை விளைவிக்கின்றது.


மன நோய் அகல 

27: உடைத்தனை வஞ்சப் பிறவியை, உள்ளம் உருகும் அன்பு 
படைத்தனை, பத்ம பதயுகம் சூடும் பணி எனக்கே 
அடைத்தனை, நெஞ்சத்து அழுக்கையெல்லாம் நின் அருட்புனலால் 
துடைத்தனை,- சுந்தரி - நின் அருள் ஏதென்று சொல்லுவதே.

அபிராமி அன்னையே! நான் அகத்தே கொண்டிருந்த ஆணவம், கன்மம், மாயை என்கிற பொய் ஜாலங்களை உடைத்தெறிந்தாய். பக்திக்கனல் வீசும் அன்பான உள்ளத்தினை அளித்தாய். இந்த யுகத்தில் நின் தாமரை போலும் சேவடிக்குப் பணி செய்ய எனக்கு அருள் புரிந்தாய். என் நெஞ்சத்திலேயிருந்த அழுக்கையெல்லாம் துப்புரவாக உன்னுடைய அருள் வெள்ளத்தால் துடைத்தாய். பேரழகு வடிவே! நின் அருளை எப்படி நான் வாய்விட்டு உரைப்பேன்!


இம்மை மறுமை இன்பங்கள் அடைய 

28: சொல்லும் பொருளும் என, நடம் ஆடும் துணைவருடன் 
புல்லும் பரிமளப் பூங்கொடியே. நின் புதுமலர்த் தாள் 
அல்லும் பகலும் தொழுமவர்க்கே அழியா அரசும் 
செல்லும் தவநெறியும், சிவலோகமும் சித்திக்குமே.

தூய்மையான சொல்லோடு இணைந்த பொருள் போல ஆனந்தக் கூத்தாடும் துணைவருடன் இணைந்து நிற்கும் மணம் வீசுகின்ற அழகிய பூங்கொடி போன்றவளே! அன்றலர்ந்த பரிமள மலரைப் போல உள்ள உன் திருவடிகளை இரவென்றும், பகலென்றும் பாரமால் தொழுகின்ற அடியார் கூட்டத்திற்கே என்றும் அழியாத அரச போகமும், நல்ல மோட்சத்திற்கான தவநெறியும், சிவபதமும் வாய்க்கும்.


எல்லா சித்திகளும் அடைய 

29: சித்தியும் சித்தி தரும் தெய்வம் ஆகித் திகழும் பரா 
சக்தியும், சக்தி தழைக்கும் சிவமும், தவம் முயல்வார் 
முத்தியும், முத்திக்கு வித்தும், வித்து ஆகி முளைத்து எழுந்த 
புத்தியும், புத்தியினுள்ளே புரக்கும் புரத்தை அன்றே.

அபிராமித் தேவி! நீயே சகலத்திற்கும் சித்தியாவாய். அச்சித்தியைத் தரும் தெய்வமான ஆதி சக்தியாகவும் திகழ்கின்றாய். பராசக்தியாகிய நீ கிளைத்தெழக் காரணமான பரமசிவமும், அச்சிவத்தைக் குறித்துத் தவம் செய்யும் முனிவர்களுக்கு முக்தியும், அம் முக்தியால் ஏற்படுகின்ற விதையும், அவ்விதையில் ஏற்பட்ட ஞானமும், ஞானத்தின் உட்பொருளும், என் நின்று, சகல பந்தங்களினின்று, காக்கக்கூடிய தெய்வம் திரிபுர சுந்தரியாகிய உன்னைத் தவிர வேறு யார் உளர்?


விபத்து ஏற்படாமல் இருக்க 

30: அன்றே தடுத்து என்னை ஆண்டுகொண்டாய், கொண்டது அல்ல என்கை 
நன்றே உனக்கு? இனி நான் என் செயினும் நடுக்கடலுள் 
சென்றே விழினும், கரையேற்றுகை நின் திருவுளமோ.- 
ஒன்றே, பல உருவே, அருவே, என் உமையவளே.

அபிராமி அன்னையே! என் உமையவளே! நான் பாவங்களைச் செய்வதற்கு முன்பே என்னை தடுத்தாட் கொண்டவளே! நான் பாவங்களையே செய்தாலும், நடுக்கடலில் சென்று வீழ்ந்தாலும், அதனின்று காப்பது நின் கடைமையாகும். என்னை ஈடேற்ற முடியாது என்று சொன்னால் நன்றாகாது. இனி உன் திருவுளம்தான் என்னைக் கரை ஏற்ற வேண்டும் (பந்தபாசக் கடலில் இருந்து முக்திக் கரை ஏற்றுதல்). ஒன்றாகவும், பலவாகவும், விளங்குகின்ற என் உமையவளே!


மறுமையில் இன்பம் உண்டாக 

31: உமையும் உமையொருபாகனும், ஏக உருவில் வந்து இங்கு 
எமையும் தமக்கு அன்பு செய்யவைத்தார், இனி எண்ணுதற்குச் 
சமையங்களும் இல்லை, ஈன்றெடுப்பாள் ஒரு தாயும் இல்லை, 
அமையும் அமையுறு தோளியர்மேல் வைத்த ஆசையுமே.

அபிராமித் தேவியே! நீயும், உன்னைப் பாகமாகவுடைய எம்பிரானும், ஆண்பாதி, பெண்பாதி என்ற நிலையில் காட்சியளித்ததோடு அல்லாமல், என்னை உங்களுக்குத் தொண்டு செய்யும்படியாகவும் அருள்புரிந்தீர்கள். ஆகவே எனக்கன்றி இனிச் சிந்திப்பதற்கு ஒரு மதமும் இல்லை. என்னை ஈன்றெடுக்க ஒரு தாயும் இல்லை. வேய் (மூங்கில்) போன்ற தோளையுடைய பெண்ணின் மேல் வைத்த ஆசையும் இல்லாமல் ஒழிந்தது.


துர் மரணம் வராமலிருக்க 

32: ஆசைக் கடலில் அகப்பட்டு, அருளற்ற அந்தகன் கைப் 
பாசத்தில் அல்லற்பட இருந்தேனை, நின் பாதம் என்னும் 
வாசக் கமலம் தலைமேல் வலிய வைத்து, ஆண்டு கொண்ட 
நேசத்தை என் சொல்லுவேன்?- ஈசர் பாகத்து நேரிழையே.

அபிராமித்தாயே! எந்தன் ஈசன் இடப்பாகத்தில் தானொரு பகுதியாக அமைந்தவளே! அம்மா! நான் கொடிய ஆசையென்னும் துயரக் கடலில் மூழ்கி இரக்கமற்ற எமனின் பாச வலையில் சிக்கியிருந்தேன். அத் தருணத்தில் பாவியாகிய என்னை மணம் பொருந்திய உன்னுடைய பாதத் தாமரையே வலிய வந்து என்னை ஆட்கொண்டது! தாயே! நின் அரும்பெரும் கருணையை என்னென்று உரைப்பேன்!


இறக்கும் நிலையிலும் அம்பிகை நினைவோடு இருக்க 

33: இழைக்கும் வினைவழியே அடும் காலன், எனை நடுங்க 
அழைக்கும் பொழுது வந்து, அஞ்சல் என்பாய். அத்தர் சித்தம் எல்லாம் 
குழைக்கும் களபக் குவிமுலை யாமளைக் கோமளமே. 
உழைக்கும் பொழுது, உன்னையே அன்னையே என்பன் ஓடிவந்தே

தாயே! அபிராமியே! நான் செய்த தீய வழிகளுக்காக என்னை நெருங்குகின்ற எமன் என்னைத் துன்புறுத்தி, வதைக்கும் பொழுது, தாயே உன்னை அழைக்க, அஞ்சேல் என ஓடிவந்து காப்பவளே! சிவ பெருமானின் சித்தத்தையெல்லாம் குழையச் செய்கின்ற சந்தனம் பூசிய குவிந்த முலைகளையுடைய இளமையான கோமளவல்லித் தாயே! மரண வேதனையில் நான் துன்புறும் போது உன்னை, 'அன்னையே' என்பேன். ஓடிவந்து என்னைக் காத்தருள்வாய்!


சிறந்த நன்செய் நிலங்கள் கிடைக்க 

34: வந்தே சரணம் புகும் அடியாருக்கு, வானுலகம் 
தந்தே பரிவொடு தான் போய் இருக்கும்--சதுர்முகமும், 
பைந் தேன் அலங்கல் பரு மணி ஆகமும், பாகமும், பொற் 
செந் தேன் மலரும், அலர் கதிர் ஞாயிறும், திங்களுமே.

தாயே! அபிராமி, நீ நான்முகங்களையுடைய பிரம்மனின் படைப்புத் தொழிலில் இருக்கின்றாய்! பசுமையான தேன் கலந்த துபள மாலையையும், நவமணி மாலைகளையும் அணிந்த மார்பினனாகிய திருமாலின் மார்பில் இருக்கின்றாய்! சிவபெருமானின் இடப்பாகத்திலும், பொன் தாமரை மலரிலும், விரிந்த கதிர்களுடைய சூரியனிடத்திலும், சந்திரனிடத்தும் தங்கியிருக்கின்றாய். உன்னைச் சரணமென்று வந்தடையும் பக்தர்களைத் துயரங்களிலிருந்து நீக்கி, வானுலக வாழ்வைக் கொடுப்பவள் நீயே.


திருமணம் நிறைவேற 

35: திங்கட் பகவின் மணம் நாறும் சீறடி சென்னி வைக்க 
எங்கட்கு ஒரு தவம் எய்தியவா, எண் இறந்த விண்ணோர்-- 
தங்கட்கும் இந்தத் தவம் எய்துமோ?- தரங்கக் கடலுள் 
வெங் கண் பணி அணைமேல் துயில்கூரும் விழுப்பொருளே.

அன்னையே! அபிராமியே! திருப்பாற்கடலிற் சிவந்த கண்களையுடை பாம்புப் படுக்கையில் வைஷ்ணவி என்னும் பெயரால் அறிதுயில் அமர்ந்தவளே! பிறைச் சந்திரனின் மணம் பொருந்திய அழகிய பாதங்களை எம்மேல் வைக்க நாங்கள் செய்த தவம்தான் என்னவோ! விண்ணுலகத் தேவர்களுக்கும் இந்தப் பாக்கியம் கிட்டுமோ!


பழைய வினைகள் வலிமை அழிய 

36: பொருளே, பொருள் முடிக்கும் போகமே, அரும் போகம் செய்யும் 
மருளே, மருளில் வரும் தெருளே, என் மனத்து வஞ்சத்து 
இருள் ஏதும் இன்றி ஒளி வெளி ஆகி இருக்கும் உன்தன் 
அருள் ஏது.- அறிகின்றிலேன், அம்புயாதனத்து அம்பிகையே.

குவிந்த தனங்களையுடைய அபிராமியே! நீ பொருளாக இருக்கின்றாய் என்கிறார்கள். பிறகு அப்பொருளால் நுகரப்படும் போகமும் நீயே என்கிறார்கள். பிறகு அப்போகத்தால் ஏற்படுகின்ற மாயையாகவும் இருக்கின்றாய் என்றும், அம்மாயையில் தோன்றி விளங்கும் தெளிவாகவும் விளங்குகின்றாய் என்றும் கூறுகின்றார்கள்; இவ்வாறு பல கூறுபாடுகளாகவுள்ள நீயே என் மனத்தில் அஞ்ஞான மாயை அகற்றி தூய ஞான ஒளியை ஏற்றியிருக்கின்றாய். பரவொளியாய் விளங்கும் அபிராமியே! நின் திருவருளின் மகிமையை உணர மாட்டாது மயங்குகின்றேன்.

நவ மணிகளை பெற 

37: கைக்கே அணிவது கன்னலும் பூவும், கமலம் அன்ன 
மெய்க்கே அணிவது வெண் முத்துமாலை, விட அரவின் 
பைக்கே அணிவது பண்மணிக் கோவையும், பட்டும், எட்டுத் 
திக்கே அணியும் திரு உடையானிடம் சேர்பவளே.

என் அபிராமி அன்னையே! நின் அருட் கரங்களில் அணிவது இனிய கரும்பும், மலர்க் கொத்துமாகும். தாமரை மலரைப் போன்ற மேனியில் அணிந்து கொள்வது, வெண்மையான நன்முத்து மாலையாகும். கொடிய பாம்பின் படம் போல் உள்ள அல்குலைக் கொண்ட இடையில் அணிவது பலவித நவமணிகளால் செய்யப்பட்ட மேகலையும் பட்டுமேயாகும். அனைத்துச் செல்வங்களுக்கும் தலைவனாகிய எம்பெருமான் எட்டுத் திசைகளையுமே ஆடையாகக் கொண்டுள்ளான். அப்படிப்பட்ட எம்பிரானின் இடப்பாகத்தில் பொலிந்து தோன்றுகின்றாய் நீ!


வேண்டியதை வேண்டியவாறு அடைய 

38: பவளக் கொடியில் பழுத்த செவ்வாயும், பனிமுறுவல் 
தவளத் திரு நகையும் துணையா, எங்கள் சங்கரனைத் 
துவளப் பொருது, துடியிடை சாய்க்கும் துணை முலையாள்-- 
அவளைப் பணிமின் கண்டீர், அமராவதி ஆளுகைக்கே.

என் அன்னை அபிராமி பவளக்கொடி போலும் சிவந்த வாயை உடையவள். குளிர்ச்சி தரும் முத்துப்பல் சிரிப்பழகி, அது மட்டுமா? எம் ஈசன் சங்கரனின் தவத்தைக் குலைத்தவள். எப்படி? உடுக்கை போலும் இடை நோகும்படியுள்ள இணைந்த முலைகளால்! அப்படிப்பட்டவளைப் பணிந்தால் தேவர் உலகமே கிடைக்கும். ஆகவே அவளைப் பணியுங்கள்.

கருவிகளை கையாளும் வலிமை பெற 

39: ஆளுகைக்கு, உன்தன் அடித்தாமரைகள் உண்டு, அந்தகன்பால் 
மீளுகைக்கு, உன்தன் விழியின் கடை உண்டு, மேல் இவற்றின் 
மூளுகைக்கு, என் குறை, நின் குறையே அன்று,-முப்புரங்கள். 
மாளுகைக்கு, அம்பு தொடுத்த வில்லான், பங்கில் வாணுதலே.

அபிராமி! நின் திருவடித் தாமரைகள் இருக்கின்றன. அவற்றிற்கு என்னை ஆளும் அருள் உண்டு. உன்னுடைய கடைக்கண் கருணையுண்டு. ஆகையால் எமனிடத்திலிருந்து எனக்கு மீட்சியுண்டு. நான் உன்னை முயன்று வணங்கினால் பயன் உண்டு. வணங்காவிடின் அது என் குறையே; உன் குறையன்று. அழகிய நெற்றியை உடையவளே! முப்புரத்தை அழிக்க வில்லையும் அம்பையும் எடுத்த சிவபெருமானின் இடப்பாகத்தில் அமர்ந்தவளே! அபிராமியே!


பூர்வ புண்ணிய பலன் தர 

40: வாள்-நுதல் கண்ணியை, விண்ணவர் யாவரும் வந்து இறைஞ்சிப் 
பேணுதற்கு எண்ணிய எம்பெருமாட்டியை, பேதை நெஞ்சில் 
காணுதற்கு அண்ணியள் அல்லாத கன்னியை, காணும்--அன்பு 
பூணுதற்கு எண்ணிய எண்ணம் அன்றோ, முன் செய் புண்ணியமே.

ஒளி பொருந்திய நெற்றியுடையவள் அபிராமி! தேவர்களும் வணங்க வேண்டும் என்ற நினைப்பை உண்டு பண்ணக்கூடியவள்! அறியாமை நிறைந்த நெஞ்சுடையார்க்கு எளிதில் புலப்படாதவள். என்றும் கன்னியானவள். இப்படிப்பட்டவளை நான் அண்டிக் கொண்டு வணங்க எண்ணினேன். இதுவே நான் முற்பிறவிகளில் செய்த புண்ணியமாகும்.


நல்லடியார் நட்பு பெற 

41: புண்ணியம் செய்தனமே-மனமே.- புதுப் பூங் குவளைக் 
கண்ணியும் செய்ய கணவரும் கூடி, நம் காரணத்தால் 
நண்ணி இங்கே வந்து தம் அடியார்கள் நடு இருக்கப் 
பண்ணி, நம் சென்னியின் மேல் பத்ம பாதம் பதித்திடவே.

அபிராமி, புதிதாக மலர்ந்த குவளைக் கண்களையுடையவள். அவள் கணவரோ சிவந்த திருமேனியையுடைய சிவபெருமான். அவர்களிருவரும் இங்கே கூடிவந்து அடியார்களாகிய நம்மைக் கூட்டினார்கள். அத்துடன் நம்முடைய தலைகளை அவர்களுடைய திருப்பாதங்களின் சின்னமாகச் சேர்த்துக் கொண்டார்கள். அவர்களின் அருளுக்கு நாம் புண்ணியமே செய்திருக்கிறோம்.


உலகினை வசப்படுத்த 

42: இடங்கொண்டு விம்மி, இணைகொண்டு இறுகி, இளகி, முத்து 
வடங்கொண்ட கொங்கை-மலைகொண்டு இறைவர் வலிய நெஞ்சை 
நடங்கொண்ட கொள்கை நலம் கொண்ட நாயகி, நல் அரவின் 
வடம் கொண்ட அல்குல் பணிமொழி--வேதப் பரிபுரையே.

அம்மையே! ஒளிவீசும் முத்துமாலை உன்னுடைய தனங்களில் புரள்கின்றது. உம்முடைய தனங்களோ ஒன்றுக்கொன்று இடமின்றி பருத்து மதர்த்திருக்கின்றது. இந்தக் கொங்கையாகிய மலை சிவபெருமானின் வலிமை பொருந்திய மனத்தை ஆட்டுவிக்கின்றது. அபிராமி சுந்தரியே! நல்ல பாம்பின் படம் போன்ற அல்குலை உடையவளே! குளிர்ச்சியான மொழிகளையுடையவளே! வேதச் சிலம்புகளைத் திருவடிகளில் அணிந்து கொண்டவளே! தாயே!


தீமைகள் ஒழிய 

43: பரிபுரச் சீறடிப் பாசாங்குசை, பஞ்சபாணி, இன்சொல் 
திரிபுர சுந்தரி, சிந்துர மேனியள் தீமை நெஞ்சில் 
புரிபுர, வஞ்சரை அஞ்சக் குனி பொருப்புச்சிலைக் கை, 
எரி புரை மேனி, இறைவர் செம்பாகத்து இருந்தவளே.

சிலம்பணிந்த அழகிய பாதங்களை உடையவளே! பாசத்தையும் அங்குசத்தையும் உடையவளே! பஞ்ச பாணங்களையும், இனிமையான சொல்லையுமுடைய திரிபுர சுந்தரியே! சிவந்த சிந்தூர மேனி உடையவளே! கொடிய மனத்தையுடைய முப்புரத்தை ஆண்ட அசுரரை அஞ்சி நடுங்கும்படி முப்புரத்தை அழித்த சிவபெருமானின் இடப்பாகத்தில் அமர்ந்தவளே!

பிரிவுணர்ச்சி அகல 

44: தவளே இவள், எங்கள் சங்கரனார் மனை மங்கலமாம் 
அவளே, அவர்தமக்கு அன்னையும் ஆயினள், ஆகையினால், 
இவளே கடவுளர் யாவர்க்கும் மேலை இறைவியும் ஆம், 
துவளேன், இனி ஒரு தெய்வம் உண்டாக மெய்த் தொண்டு செய்தே.

எங்கள் இறைவனாகிய சங்கரனின் இல்லத் துணைவியே! அவருக்கே அன்னையாகவும் (பராசக்தி ஈன்ற பரமசிவம்) ஆனவளே! ஆகையால் நீயே யாவர்க்கும் மேலானவள்! ஆகவே, உனக்கே இனி உண்மையான தொண்டு செய்வேன். ஆதலால், இனி நான் துன்பங்களால் துவள மாட்டேன். தாயே!


உலகோர் பழியிலிருந்து விடுபட 

45: தொண்டு செய்யாதுநின் பாதம் தொழாது, துணிந்து இச்சையே 
பண்டு செய்தார் உளரோ, இலரோ? அப் பரிசு அடியேன் 
கண்டு செய்தால் அது கைதவமோ, அன்றிச் செய்தவமோ? 
மிண்டு செய்தாலும் பொறுக்கை நன்றே, பின் வெறுக்கை அன்றே.

அன்னையே! உனக்கு பணிவிடை செய்யாமல், உன் பாதங்களை வணங்காமல், தன் இச்சைப்படியே கடமையைச் செய்த ஞானிகளும் உளர். அவர்களின்படி நான் நடந்தால் நீ வெறுப்பாயோ, அல்லது பொறுத்து அருள் செய்வாயோ, எனக்குத் தெரியாது! ஆயினும், நான் தவறே செய்தாலும், என்னை வெறுக்காமல் பொறுத்துக் கொண்டு நீ அருள் பண்ணுவதே நீதியாகும்.


நல் நடத்தையோடு வாழ 

46: வெறுக்கும் தகைமைகள் செய்யினும், தம் அடியாரை மிக்கோர் 
பொறுக்கும் தகைமை புதியது அன்றே,-புது நஞ்சை உண்டு 
கறுக்கும் திருமிடற்றான் இடப்பாகம் கலந்த பொன்னே.- 
மறுக்கும் தகைமைகள் செய்யினும், யானுன்னை வாழ்த்துவனே.

ஏ அபிராமியே! விஷத்தை உண்டவனும், அதனால் கருத்திருக்கும் கழுத்தை உடையவனுமாகிய சிவபெருமானின் இடப்பாகத்தில் அமர்ந்தவளே! சிறியோர்கள் செய்யக்கூடாத செயல்களைச் செய்து விடுவர். அறிவிற் சிறந்த ஞானிகள் அதைப் பொறுத்து அருளியதும் உண்டு. இது ஒன்றும் புதுமையல்ல. பொன் போன்றவளே! நான் தகாத வழியில் சென்றாலும், அது உனக்கே வெறுப்பாகயிருந்தாலும் மீண்டும் மீண்டும் உன்னையே சரணடைவேன். அத்துடன் மேலும் வாழ்த்தி வழிபடுவேன்.


யோக நிலை அடைய 

47: வாழும்படி ஒன்று கண்டு கொண்டேன், மனத்தே ஒருவர் 
வீழும்படி அன்று, விள்ளும்படி அன்று, வேலை நிலம் 
ஏழும் பரு வரை எட்டும், எட்டாமல் இரவு பகல் 
சூழும் சுடர்க்கு நடுவே கிடந்து சுடர்கின்றதே.

அன்னையே!அபிராமித் தாயே! நீ கடல்களுக்கும் ஏழ் உலகங்களுக்கும், உயர்ந்த மலைகள் எட்டினிற்கும் அரிதில் எட்டாதவள். மேலாக உள்ள இரவையும், பகலையும் செய்யும் சந்திர சூரியர்க்கு இடையே நின்று, சுடர்விட்டுப் பிராகாசிக்கின்றவள்!

உடல் பற்று நீங்க 

48: சுடரும் கலைமதி துன்றும் சடைமுடிக் குன்றில் ஒன்றிப் 
படரும் பரிமளப் பச்சைக் கொடியைப் பதித்து நெஞ்சில் 
இடரும் தவிர்த்து இமைப்போது இருப்பார், பின்னும் எய்துவரோ- 
குடரும் கொழுவும் குருதியும் தோயும் குரம்பையிலே.

ஏ அபிராமியே! பச்சைப் பரிமளக் கொடி நீயேயாகும். ஒளிரும் இளம் பிறையை, குன்றை ஒத்த சடாமுடியில் அணிந்திருக்கும் சிவபெருமானை இணைந்தவளே! உன்னையே நெஞ்சில் நினைந்து வழிபடும் யோகிகளூம், இமையாது கடுந்தவம் புரியும் ஞானிகளூம் மீண்டும் பிறப்பார்களோ? மாட்டார்கள்! ஏனென்றால் தோலும், குடலும், இரத்தமும், இறைச்சியும் கொண்ட இந்த மானிடப் பிறவியை விரும்பார், ஆதலின்!


மரணத் துன்பம் இல்லாதிருக்க 

49: குரம்பை அடுத்து குடிபுக்க ஆவி, வெங் கூற்றுக்கு இட்ட 
வரம்பை அடுத்து மறுகும் அப்போது, வளைக்கை அமைத்து, 
அரம்பை அடுத்து அரிவையர் சூழ வந்து, அஞ்சல் என்பாய்-- 
நரம்பை அடுத்து இசை வடிவாய் நின்ற நாயகியே.

நரம்புக் கருவிகளைக் கொண்ட, இசையே வடிவாக உள்ள அபிராமியே! அடியேனாகிய என்னுடைய உடலையும், அதிலே இணைந்த உயிரையும் கொடுமையான எமன் வந்து பறிக்க, நானும் மரணத்திற்கு அஞ்சி வருந்துவேன். அப்பொழுது அரம்பையரும், தேவமகளிரும் சூழ என்னிடத்து வந்து அஞ்சேல் என்பாய்! எனக்கு அருள் புரிவாய்!


அம்பிகையை நேரில் காண 

50: நாயகி, நான்முகி, நாராயணி, கை நளின பஞ்ச 
சாயகி, சாம்பவி, சங்கரி, சாமளை, சாதி நச்சு 
வாய் அகி மாலினி, வாராகி, சூலினி, மாதங்கி என்று 
ஆய கியாதியுடையாள் சரணம்-அரண் நமக்கே.

ஏ அபிராமியே! நீயே உலக நாயகி. பிரம்ம சக்தியும், விஷ்ணு சக்தியும் நீ. நீயே ஒய்யாரமாக ஐவகை மலர் அம்புகளைக் கையிலேந்தியவள். சம்புசக்தி, சங்கரி, எழிலுடையாள், நாகபாணி, மாலினி, உலகளிக்கும் வராகி, சூலி, மாதங்க முனிமகள் என்றெல்லாம் பல வடிவானவள்! நீயே ஆதியானவள். ஆகவே, உன்னுடைய திருவடியையே வணங்கினோம். அதுவே எமக்குப் பாதுகாவல்.

(தொடரும்)